பொதுயுடமைத் தலைவர் தியாகி சங்கரய்யாவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்க ஆவன செய்யப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 


இன்று 102வது பிறந்தநாள் காணும் சங்கரய்யாவுக்கு 2 ஆண்டுக்கு முன் தகைசால் தமிழர் விருது வழங்கி அரசு கௌரவித்தது. ஏழை, எளியோருக்காக தன் வாழ்நாளை அர்ப்பணித்த சங்கரய்யாவை பெருமைப்படுத்தும் வகையில் அவருக்கு டாக்டர் பட்டம் வழங்க வேண்டும். மதுரை அமெரிக்கன் கல்லூரியில் படித்தபோது ஆங்கிலேயருக்கு எதிராக போராட்டம் நடத்தி சிறை சென்றவர் சங்கரய்யா என முதலமைச்சர் ஸ்டாலில் புகழாரம் சூட்டியுள்ளார். 






முன்னதாக, சங்கரய்யாவின் 102வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் புகழாரம் சூட்டியிருந்தார். அதில், “பொதுவுடைமை இயக்கத்தின் முதுபெரும் தலைவர் 'தகைசால் தமிழர்' திரு. சங்கரய்யா அவர்களின் 102-ஆவது பிறந்தநாள்! பொதுவாழ்விலும் பொதுவுடைமை இலட்சியங்களைக் கடைப்பிடிப்பதிலும் நம் எல்லோருக்கும் வழிகாட்டியாக விளங்கும் அவர் நலமுடன் வாழிய பல்லாண்டு!” என பதிவிட்டுருந்தார். 


கௌரவ டாக்டர் பட்டம்:


தகைசால் தமிழர் சங்கரய்யா அவர்களுக்கு மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் மூலம் கௌரவ டாக்டர் பட்டம் வழங்க ஆவன செய்யப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.


சுதந்திரப் போராட்டத் தியாகியும் மிகச் சிறந்த பொதுவுடமைத் தலைவராகவும் திகழும் நம் மரியாதைக்குரிய திரு.சங்கரய்யா அவர்களுக்கு தமிழ்நாடு அரசு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு "தகைசால் தமிழர்" என்ற விருதினை வழங்கி கௌரவித்தது.


இன்று 102 வது பிறந்த நாள் காணும் பெரியவர் சங்கரய்யா அவர்கள் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் பயின்ற பொழுது ஆங்கிலேயர்களுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டதால் சிறையில் அடைக்கப்பட்டார். அதன் காரணமாக அவர் கல்லூரித் தேர்வினை எழுத முடியவில்லை. இந்தியா விடுதலை பெறுவதற்கு 12 மணி நேரங்களுக்கு முன்பாக தான் 1947-ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 15 ஆம் தேதியன்று அவர் விடுதலை செய்யப்பட்டார் என்பது வரலாறு.


ஏழை எளிய மக்களுக்காக தம் வாழ்நாளை அர்ப்பணித்தவரும் தமிழினத்தின் வளர்ச்சிக்காக உழைத்தவரும் ஒரு மிகச் சிறந்த சுதந்திரப் போராட்டத் தியாகியுமான சங்கரய்யா அவர்களுக்குச் சிறப்பு சேர்க்கும் வகையில் அவருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்க வேண்டும் எனப் பல்வேறு தரப்பிலும் இருந்து கோரிக்கைகள் வரப்பெற்றுள்ளன. அதன் அடிப்படையில், மரியாதைக்குரிய திரு.சங்கரய்யா அவர்களுக்கு மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் சார்பாக கௌரவ டாக்டர் பட்டம் வழங்குவதற்கு ஆவன செய்யப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார்.