கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் அமைந்துள்ள நடராஜர் கோயில் நிர்வாகத்தின் மீது பல்வேறு புகார்கள் இந்து சமய அறநிலையத்துறைக்கு வரப்பட்டன. இதையடுத்து இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை தருவதற்காக குழு ஒன்று அமைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து இந்து சமய அறநிலையத் துறையின் இணை ஆணையர்கள் நடராஜ், லட்சுமணன், மாவட்ட வருவாய் அலுவலர் சுகுமார், பெரம்பலூர் உதவி ஆணையர் அரவிந்தன், திருநெல்வேலி மண்டல தணிக்கை அலுவலர் ராஜேந்திரன் ஆகிய 5 பேர் கொண்ட குழுவினர் நேற்று சிதம்பரம் கோயிலுக்கு வந்தனர். அவர்களுடன் ஒருங்கிணைப்பாளராக கடலூர் துணை ஆணையர் ஜோதி உள்ளிட்டோர் கடந்த 7 மற்றும் 8  கோயிலில் ஆய்வு மேற்கொண்டனர். 




அவர்களுக்கு பாதுகாப்பாக கடலூர் மாவட்ட போலீஸ் கூடுதல் எஸ்பி அசோக்குமார், சிதம்பரம் டிஎஸ்பி ரமேஷ்ராஜ், சிதம்பரம் கோட்டாட்சியர் ரவி உள்ளிட்ட அதிகாரிகள் வந்தனர். கோயிலுக்கு வந்ததும் அதிகாரிகளை தீட்சிதர்கள் விபூதி பிரசாதம் கொடுத்து வரவேற்று அழைத்துச் சென்றனர். பின்னர் கோயில் கனகசபை மீது அவர்களை ஏற்றி சாமி தரிசனம் செய்து வைத்தனர். இதையடுத்து தாங்கள் கோயிலில் ஆய்வுக்கு வந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அப்போது ஆய்வுக்கு தீட்சிதர்கள் ஆட்சேபனை தெரிவித்தனர். தீட்சிதர்களின் சார்பில் அவரது வழக்கறிஞர் சந்திரசேகர் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகளிடம் பேசினார். அப்போது உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக இந்த குழு அமைக்கப்பட்டுள்ளது. கோயிலில் அனைத்து வரவு செலவு கணக்குகளும் சரியாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. உச்சநீதிமன்றம் கோயில் நிர்வாகம் குறித்து தெளிவாக தீர்ப்பு அளித்துள்ளது. ஆனால் நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக இந்து சமய அறநிலைத்துறை குழு ஆய்வுக்கு வந்துள்ளதால் ஒத்துழைப்பு அளிக்க முடியாது. சட்டப்படி அமைக்கப்பட்ட குழு வந்தால் ஒத்துழைக்க தயாராக இருப்பதாக தெரிவித்தனர்.




இதையடுத்து கோயிலை விட்டு வெளியே வந்த அதிகாரிகள் குழு கோயில் வளாகத்தில் நின்றபடி ஆலோசனையில் ஈடுபட்டனர். மேலும், ஆயிரம்கால் மண்டபத்தில் அமர்ந்து இந்து சமய அறநிலையத் துறையிடம் உள்ள கோப்புகளை படித்துப் பார்த்தனர். தொடர்ந்து 1 மணியில் இருந்து 4 மணி வரை கோயில் நடை பூட்டப்படும் என்பதால், அதிகாரிகள் உணவு இடைவேளைக்காக வெளியே சென்றனர். மீண்டும் ஆய்விற்காக மாலை 5 மணிக்கு மேல் வருகை தந்த இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகளிடம் தீட்சிதர்கள் தரப்பு வழக்கறிஞர் சந்திரசேகர் காலையில் கூறிய பதிவான நீதிமன்ற தீர்ப்பை சுட்டிக்காட்டி ஆய்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும் உச்ச  நீதிமன்றத்தில் அனுமதி பெற்று ஆய்வுக்கு வந்தால் மட்டுமே ஆய்வு ஒத்துழைப்பு தருவோம் என தெரிவித்தால் மீண்டும்  ஆலோசனையில் ஈடுபட்ட  அதிகாரிகள் நேற்று காலை முதல் இரவு வரை காத்திருந்து ஆய்வை மேற்கொள்ள முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பினர். மேலும் இரண்டு நாட்கள் கண்டிப்பாக ஆய்வு நடைபெறும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு நேற்று கூறி நிலையில் மீண்டும் ஜூன்  8ஆம் தேதி  இரண்டாவது நாள் ஆய்வுக்காக  கோயில் உள்ளே சென்ற அதிகாரிகள் சாமி தரிசனம் செய்த பின்னர் தீட்சிதர்களிடம் கணக்கு வழக்குகள் தொடர்பான ஆவணங்களை கேட்டனர். அதற்கு பதிலளித்த தீட்சிதர்கள் கோயில் செயலாளர் மற்றும் வழக்கறிஞர் தற்போது ஊரில் இல்லை எனவும், அவர்கள் சென்னைக்கு சென்றுள்ளதாக கூறினர். அதனை அடுத்து அதிகாரிகள் கோயில் வளாகத்தில் அமர்ந்து ஆலோசனையில் ஈடுபட்டனர்.




பின்னர் மதியம் உணவிற்காக வெளியில் சென்ற அவர்கள் மீண்டும் 4.30 மணியளவில் கோயிலுக்கு வந்து மீண்டும் தீட்சிதர்களிடம் ஆவணங்களை வழங்குமாறு கேட்டனர். அதற்கு கோயில் செயலர் ஊரில் இல்லாததால் வழங்க இயலாது என தெரிவித்தனர். அதனை தொடர்ந்து இந்து சமய அறநிலையத்துறை குழுவினர் ஆய்வு தொடர்ந்து மேற்கொள்ளாமல் நிறைவு செய்தனர். ஒரு செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட வருவாய் அலுவலர் சுகுமார், தொடர்ந்து 2 நாட்களாக தீட்சிதர்கள் முறை ஆவணங்களை வழங்க மறுத்து ஒத்துழைப்பு வழங்காததால் ஆய்வை முழுமையாக நடத்த முடியாமல் திரும்ப செல்கிறோம். இதுகுறித்த அறிக்கையை இந்து சமய அறநிலை துறை ஆணையரிடம் கொடுத்து மேற்கொண்டு சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்து சென்றார்.




இந்நிலையில் இது தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை சார்பில் பத்திரிகை செய்தி ஒன்றை வெளியிட்டனர். அதில்,  சிதம்பரம் நடராஜர் கோயில் இந்து சமய அறநிலைய அறக்கொடைகள் சட்டத்தின் சட்ட பிரிவு 23 மற்றும் 33 ன்படி, ஆணையரால் விசாரணை குழுவிடம் திருக்கோயில் நலனில் அக்கறை உள்ள நபர்கள்  தங்களது கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை வருகின்ற 20.06.2022 மற்றும் 21.06.2022 ஆகிய தேதிகளில் காலை 10 மணி முதல் மாலை 3 வரை துணை ஆணையர், ஒருங்கிணைப்பாளர், விசாரணைக்குழு, இணை ஆணையர் அலுவலகம், இந்து சமய அறநிலையத்துறை, எண் 8, ஆற்றங்கரை தெரு, புதுப்பாளையம், கடலூர் -607001 என்ற முகவரியில் நேரில் அல்லது அஞ்சல் மூலம் அளிக்கலாம், அதேபோன்று vocud.hrce.@tn.gov.in என்ற மின்னஞ்சல் மூலமாகவும் தெரிவிக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண