மெட்ரோ ரயில் பணிக்காக பரங்கி மலையில் இருந்து கத்திப்பாரா மேம்பாலம் வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 


இதுகுறித்து சென்னை பெருநகர போக்குவரத்து போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பரங்கி மலை - பூந்தமல்லி சாலை, புஹாரி ஓட்டல் சந்திப்பு - கத்திப்பாரா மேம்பாலம் வரை மெட்ரோ ரயில் திட்டப்பணிகளுக்காக இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு 11 மணி முதல் 27ஆம் தேதி காலை 6 மணிவரை என 3 நாட்கள் சோதனை அடிப்படையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. 


அதன்படி, கத்திப்பாராவில் இருந்து போரூர் செல்லும்வரை போக்குவரத்தில் எந்த மாற்றமும் இல்லை. வழங்கம்போல் இயங்கும். ஆனால் போரூரில் இருந்து கத்திப்பாரா வரும் வாகனங்கள் பெல் ராணுவ சந்திப்பில் உள்ள மவுண்ட் - பூந்தமல்லி சாலையில் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. 


அதற்கு பதிலாக புதிய சாலையை நோக்கி இடதுபுறம் திரும்பி, புகாரி ஓட்டலுக்கு எதிரே உள்ள போர் கல்லறை - ராணுவ சந்திப்பில் டிஃபன்ஸ் காலனி 1வது அவென்யூ வலது புறம் திரும்பி கண்டோண்ட்மெண்ட் சாலை இடதுபுறம் திருப்பி சுந்தர்நகர் 7வது குறுக்கு தனகோட்டி ராஜா தெரு வழியாக கிண்டி தொழிற்பேட்டை எஸ்டேட் தெற்கு கட்ட சாலை 100 அடி சாலை சந்திப்பு சென்று வாகனங்கள் கத்திப்பாரா மேம்பாலத்தை அடைய வலதுபுறமாகவும், வடபழனியை அடைய இடதுபுறமாகவும் செல்லலாம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.