சென்னை பெரம்பூர் நகைக்கடையில் 9 கிலோ நகைகளை கொள்ளையைடிக்கப்பட்ட சம்பவத்தில் நடைபெற்று வரும் விசாரணை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் விளக்கமளித்துள்ளார். 


சென்னையில் கொள்ளை:


சென்னை பெரம்பூரை அடுத்த பெரவலூர் பகுதியில் பேப்பர் மில்ஸ் சாலையில் ஜே.எல்.தங்க நகைக்கடை  என்ற நகைக்கடை செயல்பட்டு வருகிறது. 2 மாடிகள் கொண்ட இந்த நகைக்கடை பில்டிங்கில் 2வது தளத்தில் உரிமையாளர் ஜெயச்சந்திரன் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.


இதனிடையே  கடந்த பிப்ரவரி 8 ஆம் தேதி நள்ளிரவு இவரது நகைக்கடைக்குள் புகுந்த கொள்ளையர்கள் ஷட்டரை காஸ் வெல்டிங் மூலம் துளையிட்டு நுழைந்தனர். உள்ளே  சென்ற அவர்கள் கடையில் இருந்த 9 கிலோ தங்க நகைகள், ரூ.20 லட்சம் மதிப்புடைய வைர நகைகளை கொள்ளையடித்து காரில் தப்பிச் சென்றனர்.


போலி பதிவெண்:


இதனையடுத்து ஜெயச்சந்திரன் அளித்த புகாரின் அடிப்படையில் திரு.வி.க நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். முதற்கட்டமாக தலைமறைவான கொள்ளையர்களை பிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தனிப்படையின் ஒரு பகுதியினர் ஆந்திரா விரைந்தனர்.மேலும் சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள் அடிப்படையில் கொள்ளையர்கள் சென்ற வாகனம் பதிவெண் அடையாளம் காணப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. ஆனால் அது போலி பதிவெண் கொண்டது என தெரிய வந்ததால் விசாரணையில் பின்னடைவு ஏற்பட்டது. 


கொள்ளையர்கள் பிடிப்பதில் தாமதம் ஏன்?


தொடர்ந்து நடத்தப்பட்ட தீவிர விசாரணையில் கொள்ளை நடந்த இடத்தில் இருந்து  கோயம்பேடு - மதுரவாயல் வழியாக சென்ற கொள்ளையர்கள் அதன்பின்னர் எங்கு சென்றனர் என தெரிய வில்லை. வானகரத்தில் இருந்து குயின்ஸ்லேண்ட் வரை சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருவதால் சாலையில் இருந்த சிசிடிவி கேமராக்கள் அகற்றப்பட்டுள்ளதால் கொள்ளையர்களை பிடிக்க முடியாத நிலை ஏற்பட்டது. 


இந்நிலையில் சம்பவத்தில் நடைபெற்று வரும் விசாரணை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் விளக்கமளித்துள்ளார். நகைக்கடை கொள்ளையில் வெளிமாநில கொள்ளையர்கள் திட்டமிட்டு நிகழ்த்தியுள்ளதாக கூறியுள்ளனர். மேலும் வெளிமாநிலத்தவர்கள் என்பதால் குற்றவாளிகளை பிடிப்பதில் தாமதம் ஏற்படுவதாகவும், சம்பந்தப்பட்டவர்களை நெருங்கி விட்டதாகவும் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.