திருவண்ணாமலை நகரின் மைய பகுதியில் இருந்து 4 கிலோ மீட்டர் தொலைவில் மாரியம்மன் கோவில் தெருவில் உள்ள ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியின் ஏ.டி.எம். மையத்தில் ரூ.19 லட்சத்து 50 ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்டது. இந்த பரபரப்பு சம்பவத்தின் தாக்கம் அடங்குவதற்குள் போலீசாருக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் மற்றொரு தகவல் வந்தது. இதேபோல், திருவண்ணாமலை நகர எல்லைக்கு உட்பட்ட 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தேனிமலை ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா' வங்கியின் ஏ.டி.எம். மையத்தில் இருந்து ரூ.32,00,000 கொள்ளையடிக்கப்பட்டது. தொடர்ந்து 2 ஏ.டி.எம். மையங்களிலும் போலீசார் பார்வையிட்டு சோதனை நடத்தினர். அப்போது அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களின் மீது கொள்ளையர்கள் கருப்பு நிற 'ஸ்பிரே'வை அடித்து விட்டு உள்ளே சென்று உள்ளனர். மேலும், திருவண்ணாமலை நகருக்கு வெளியே 22 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கலசபாக்கத்தில் உள்ள ஒன்இந்தியா ஏடிஎம் மையத்தில் ரூ‌ 3,00,000 திருவண்ணாமலையில் இருந்து 35 கிலோ மீட்டர் தொலைவில் போளூரில் உள்ள எஸ்பிஐ ஏடிஎம் மையத்தில் ரூ.18,00,000 கொள்ளையடிக்கப்பட்டது.


 




நள்ளிரவு 12 மணிக்கு மேல் மக்கள் நடமாட்டம் குறைந்த நேரத்தில் நான்கு ஏடிஎம் மையங்களில் இருந்து மொத்தம் 72 லட்ச 50 ஆயிரம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டது. பணத்தை கொள்ளையடித்த மர்ம நபர்கள் கேஸ் வெல்டிங் மூலம் ஏடிஎம் இயந்திரத்தை கட்செய்த போது பணத்தில் தீ படாதவாறு புத்திசாலி தனமாக இயந்திரத்தை மட்டும் கட்செய்துள்ளனர். பின்னர் வெல்டிங் இயந்திரம் மூலம் ஏடிஎம் இயந்திரத்தை தீ வைத்து எரித்ததுடன், ஏடிஎம் மையத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் மற்றும் ஹார்ட் டிஸ்க் உள்ளிட்டவற்றையும் கொள்ளையர்கள் எரிந்ததால் குற்றவாளிகளை கண்டுபிடிப்பதில் காவல்துறையினருக்கு மிகப்பெரிய சவால் ஏற்பட்டது. 


 




 


இந்த சம்பவம் குறித்து வடக்கு மண்டல ஐ.ஜி. கண்ணன் தலைமையிலான காவல்துறையினர் திருவண்ணாமலையில் முகாமிட்டு தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் கொள்ளை சம்பவம் நடைபெற்ற கடந்த 11-ந் தேதி இரவு திருவண்ணாமலை, போளூர், கலசபாக்கம் ஆகிய பகுதிகளில் கொள்ளை சம்பவம் நடைபெற்ற பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட துணை ஆய்வாளர் மோகன், பலராமன் தட்சிணாமூர்த்தி மற்றும் போலீஸ்காரர்கள் வரதராஜ், சுதாகர் உள்பட 6 நபர்களை திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆயுதப்படைக்கு மாற்றி இன்று உத்தரவிட்டார். ரோந்து பணியில் ஈடுபட்ட 6 காவல்துறையினரை ஆயுதப்படைக்கு மாற்றப்பட்ட சம்பவம் திருவண்ணாமலை மாவட்ட காவல்துறையில் பணியாற்றி வரும் காவல்துறையினர் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.