சென்னை மியூசிக் அகாடமியின் 96ஆவது ஆண்டு கருத்தரங்கம் மற்றும் இசை விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்றார். அப்போது பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், இன்னும் நான்கு ஆண்டுகளில் நூற்றாண்டு விழா நடக்க போகிறது. அதிலும் உறுதியாக கலந்து கொள்வேன் என நம்புகிறேன் என அடுத்த முறையும் திமுக என்பதை குறிப்புணர்த்தி பேசினார்.
இந்தியாவில் மட்டுமல்ல உலக அளவில் முக்கியமானதாக மியூசிக் அகாடமி உள்ளது. இசைக்கு மாபெரும் வரலாறுண்டு, அதில் மியூசிக் அகாடமிக்கு தனி இடமுண்டு.
”பேச்சு கச்சேரி தெரியும், பாட்டு கச்சேரி தெரியாது”
இந்த விழாவுக்கு முதலமைச்சர் அடிப்படையில் வரவில்லை, இசை ரசிகர் அடிப்படையில் வந்துள்ளேன். என்னுடைய தாத்தா முத்துவேலர் இசை வல்லமை கொண்டவர். எனது தந்தை இசை கற்க சென்றாரே தவிர தொடர்ச்சியாக கற்கவில்லை. இசைஞானம் கொண்டவராக எனது தந்தை திகழ்ந்தார். ஆனால், எனக்கு பேச்சு கச்சேரி தெரியும், பாட்டு கச்சேரி தெரியாது.
”நாகரிகத்தை வளர்த்தல்”
இசை வளர்த்தல் என்பது கலை வளர்த்தல், கலை வளர்த்தல் என்பது பண்பாட்டை வளர்த்தல், பண்பாட்டை வளர்த்தல் என்பது நாகரிகத்தை வளர்த்தல். இது போன்ற செயல்களை இசை மன்றங்கள் செய்து வருகிறது. இவ்விழாவில் விருதை பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்.
இயல், இசை, நாடகம் என்ற முத்தமிழில், முதலில் பிறந்தது நாடகம். ஆதி மனிதனின் முதல் மொழி சைகை. அதன் ஒலி குறிப்பு இசையை உருவாக்கியது. அதன் பின் எழுத்து தோன்றியது. அதனால்தான் தான் நாடகம், இசை, இயல் என்ற வரிசையை முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி தெரிவித்தார். எழுத்துகளின் பிறப்பையே காற்றிழுந்து எழும் இசையாக வடிவமைக்கும் வல்லமை தமிழரின் அறிவு இருந்தது.
”சிறந்து விளங்கிய இசை”
சங்க காலம் காப்பிய காலம் பக்தி காலம் முதல் இசையானது சிறந்து விளங்கியது. தேவாரம், திருவாசகம் உள்ளிட்ட நூல்களை படித்தால் தமிழுக்கும், இசைக்கும் உள்ள தொடர்பை அறியலாம். வேற்றுமையில் ஒற்றுமைதான் நாட்டுக்கு தேவையான கொள்கை. பக்தி இசை, திரையிசை, ராப்பிசையாக இருந்தாலும் தமிழிசையாக இருக்க வேண்டும் என முதலமைச்சர் தெரிவித்தார்.