சென்னை நகர் மற்றும் புறநகர் பகுதி மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு இடங்களில் காலை முதல் லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது. சென்னையை அடுத்த கோயம்பேடு, வடபழனி, மதுரவாயல், கோடம்பாக்கம், வள்ளூவர்கோட்டம், மயிலாப்பூர், ராயப்பேட்டை, பெருங்குடி, ஆயிரம் விளக்கு உட்பட பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. 


தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோவையில் இன்று அதிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளது. நீலகிரி, கோவையில் இன்றும், நாளையும் அதிக கனமழை தொடர வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.


அதேபோல், தமிழ்நாடு முழுவதும் அடுத்த 3 நாட்களுக்கு அதி கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. 


பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை :


கனமழை எச்சரிக்கை காரணமாக தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி,



  • நீலகிரியில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

  • கோவை மாவட்டம் வால்பாறை தாலுகாவில் மட்டும் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

  • ஆடிப்பெருக்கு காரணமாக திருப்பத்தூரில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை 


11 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு:


தூத்துக்குடி, சிவகங்கை, திருச்சி, கரூர், நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை ஆகிய 11 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.


சென்னை:


சென்னையை பொறுத்தவரை அடுத்த 2 நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மேலும் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்ய கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது


வானிலை மைய இயக்குநர்:


சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வானிலை ஆய்வு மையத்தில் தென்மண்டல வானிலை ஆய்வு மையத்தின் தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், 


“கேரளவில் பருவ மழை தீவிரமடைந்துள்ளது தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் வளிமண்டலத்தில் மேல் அடுக்கு சுழற்சி நிலவுகிறது மேலும் தமிழகத்தின் வளிமண்டல் பகுதியில் மத்திய பகுதியில் கிழக்கு திசை காற்றும் மேற்கு திசை காற்றும் சந்திக்கின்ற சேசோன் பகுதி நிலவுகிறது இந்த பகுதி அடுத்து வரும் தினங்களில் வடக்கு நோக்கி நகரக் கூடும்” என்றார். 


தொடர்ந்து பேசிய அவர், “கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் அநேக இடங்களில் மழை பெய்துள்ளது 10 இடங்களில் கனமழையும் நான்கு இடங்களில் லேசான மழையும் பெய்துள்ளது.  அதிகபட்சமாக சின்ன கல்லாரில் 13 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. வரும் ஆகஸ்ட் 5-ஆம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் கன மழை பெய்யக்கூடும்” என்றார். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண