ஆன்லைன் ரம்மி தடை மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு அக்.28ஆம் தேதி ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில் ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிக்கும் மசோதாவுக்கு விரைந்து ஒப்புதல் வழங்க வலியுறுத்தும் வகையில் ஆளுநர் ஆர்.என்.ரவியை, சட்டத்துறை அமைச்சர் ரகுபதி இன்று சந்தித்தார். 


ஆன்லைன் ரம்மி தடை மசோதா


தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட இணையதள சூதாட்ட விளையாட்டுகளை தடை செய்வதற்கான அவசர சட்டத்துக்கு முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை முன்னதாக ஒப்புதல் அளித்தது. ஆளுநரின் ஒப்புதலைப் பெற்று விரைவில் அவசர சட்டம் அமல்படுத்தப்படும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்திருந்தது.


‘ஏற்கெனவே கடந்த அதிமுக ஆட்சியில் பிறப்பிக்கப்பட்ட ஆன்லைன் ரம்மி தடை சட்டத்தை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. இதையடுத்து, வல்லுநர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோரின் கருத்துகளை கேட்டு, புதிய சட்டம் கொண்டு வருவதற்கான மசோதாவை தமிழ்நாடு அரசு உருவாக்கியுள்ளது.


ஆன்லைன் ரம்மி என்ற பெயரில் நடைபெறும் சூதாட்டங்களில் பணத்தை பறிகொடுத்து உயிரை மாய்த்துக் கொள்ளும் நிகழ்வுகள் தமிழகத்தில் தொடர் கதையாகி வருகின்றன. குறிப்பாக இளம் தலைமுறையினர் தான் ஆன்லைன் ரம்மியால் விபரீத முடிவை நாடுகின்றனர்.


"பரிசீலனையில் உள்ளது"


சென்னை ராஜ்பவனில் ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்த பின், சட்டத்துறை அமைச்சர் ரகுபதி நிரூபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, "ஆன்லைன் ரம்மி தடை மசோதா குறித்தும் ஆளுநருக்கு விளக்கம் அளித்தேன். வல்லுநர் குழுவினர் அளித்துள்ள தகவல்களையும் குறிப்பிட்டுள்ளோம். ஆன்லைன் மோசடி செய்து ஏமாற வாய்ப்பு இருப்பதை விளக்கினேன் என்று தெரிவித்தார். மேலும், ஆன்லைன் ரம்மி தடை மசோதா குறித்து பரிசீலித்து முடிவெடுப்பதாக ஆளுநர் கூறியுள்ளார்” என்றார்.


"ஆன்லைன் ரம்மி அவசர சட்டம் காலாவதி ஆகிவிட்டதால், ஏற்கனவே அமலில் உள்ள சட்டத்தின் அடிப்படையில் தான் இனி தமிழக அரசு நடவடிக்கை எடுக்க முடியும். ஆளுநர் ஒப்புதல் அளித்தவுடன் ஆன்லைன் ரம்மி தடை சட்டத்தை தமிழக அரசு அமல்படுத்த முடியும். அதற்கு நாங்களும் தயாராக உள்ளோம்” என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.


”21 மசோதாக்கள் நிலுவையில் உள்ளது”


"ஆன்லைன் ரம்மி விளையாட்டல் இதுவரை 25 பேர் உயிரிழந்துள்ளனர். ஆப்லைனில் சூதாட்டம் விளையாடி இதுவரை யாரும் தற்கொலை செய்யவில்லை என அமைச்சர் ரகுபதி தெரிவித்தார். மேலும் தமிழ்நாடு அரசு இயற்றி, ஆளநருக்கு அனுப்பப்பட்ட 21 மசோதாக்கள் நிலுவையில் உள்ளது" என்றார்.




மேலும் படிக்க


DMK: "பேராசிரியர் நூற்றாண்டு விழா; தமிழ்நாடு முழுவதும் 100 சிறப்பு கூட்டங்கள்" - தி.மு.க. தீர்மானம்