பொதுக்குழுவில் திடீரென யாராவது எந்த விவகாரத்தையாவது எழுப்ப வேண்டுமென்றால் என்ன செய்வது என்று நீதிபதி கேள்வி எழுப்பியிருக்கிறார். 


அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடைவிதிக்க வேண்டும் என ஓபிஎஸ் தரப்பு தாக்கல் செய்த மனு மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.


ஓபிஎஸ் தரப்பு வாதம்


இந்த விசாரணையில், ஓபிஎஸ் தரப்பு “பொதுக்குழு நடத்தலாம். ஆனால் ஒற்றைத் தலைமை குறித்து தீர்மானம் கொண்டுவரக்கூடாது. பொதுக்குழுவை வழக்கமான முறையில் நடத்த எங்களுக்கு ஆட்சேபனை இல்லை. ஆனால் தலைமையை மாற்றும் திருத்தங்களை செய்யக்கூடாது.” என்று வாதிட்டது. 


23 தீர்மானங்களுக்கு ஒப்புதல் 


மேலும், “ கடந்த டிசம்பரில் உட்கட்சித் தேர்தல் நடந்து ஒருமனதாக ஒருங்கிணைப்பாளர் பதவி உருவாக்கப்பட்டது. அதை தேர்தல் ஆணையம் ஏற்றுள்ளது. அந்தப்பதவிக்கு 5 ஆண்டுகள் பதவிக்காலம் உள்ளது. 23 வரைவு தீமானங்களுடன் கட்சி அலுவலகத்தில் இருந்து மின்னஞ்சல் வந்தது. அந்த தீர்மானங்களுக்கு ஒப்புதல் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த தீர்மானங்களை தவிர்த்து வேறு எந்த அஜெண்டாவையும் அனுமதிக்க முடியாது.


23 வரைவு தீர்மானங்களின் நகல் உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. ஓ.பி.எஸ். ஒப்புதல் அளித்துள்ள வரைவு தீர்மானங்களில் ஒற்றைத் தலைமை தீர்மானம் இல்லை. இந்த 23 தீர்மானங்களைத் தவிர வேறு புதிதாக தீர்மானங்களை சேர்க்கக்கூடாது. அதிமுக விதிகளுக்கு எதிராக செயல்பட மாட்டேன் எனவும் ஓ.பி.எஸ். சார்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டது. 


எடப்பாடி தரப்பு வாதம்: 


2017ல் பொதுக்குழு தீர்மானம் மூலம்தான் அதிமுக கட்சி விதிகள் திருத்தப்பட்டன என்று ஈ.பி.எஸ். தரப்பு வாதிட்டது. 


எடப்பாடி தரப்பு வாதத்தில், “ ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளரை விட பொது குழுவுக்கே அதிக அதிகாரம் உள்ளது. பொதுக்குழுவிற்கு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்தே அழைப்பு விடுத்துள்ளனர். பொதுக்குழுவில் எந்த முடிவும் எடுக்கப்படலாம். இது நடக்கும், நடக்காது என உத்தரவாதமாக சொல்ல முடியாது. எந்த விதியையும் சேர்க்கவோ, நீக்கவோ பொதுக்குழுவால் முடியும், அதற்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. கொள்கை உருவாக்குவது உள்ளிட்ட அனைத்துக்கும் பொதுக்குழுவுக்கே அதிகாரம் உள்ளது.


நாளைய பொதுக்குழுவில் திருத்தம் நடக்கலாம், நடக்காமல் இருக்கலாம்.பொதுக்குழுவில் பெரும்பான்மையான கருத்துக்கு மதிப்பளிப்பதே ஜனநாயகம். அஜெண்டா இல்லாமல்தான் ஏற்கனவே பொதுக்குழுக்கள் நடத்தப்பட்டுள்ளன. பொதுக்குழு தான் கட்சியின் உச்சபட்ச அமைப்பு. ஒருங்கிணைப்பாளரோ, இணை ஒருங்கிணைப்பாளரோ இல்லை. பெரும்பாலான உறுப்பினர்கள் பொதுக்குழுவை கூட்ட வலியுறுத்தியுள்ளனர். பொதுக்குழுவை இருவரும் இணைந்து கூட்ட முடியும், பொதுக்குழு முடிவுகள் கட்சியினரை கட்டுப்படுத்தும். எந்த விதியையும், நீக்கவோ, சேர்க்கவோ 2665 உறுப்பினர்களைக் கொண்ட பொதுக்குழுவுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. விதிகளை திருத்த யாரிடமும் அனுமதி பெறவேண்டியதில்லை. தேர்தல் ஆணையத்திடம் தெரிவித்தால் போதுமானது. ஆகையால் நாளை நடைபெறும் அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு தடை விதிக்க கூடாது”  எனத் தெரிவிக்கப்பட்டது. 


அதைத்தொடர்ந்து வாதிட்ட ஓபிஎஸ், “ எந்த உறுப்பினரும் பொதுக்குழு கூட்டத்தில் குரல் எழுப்பலாம் என்பதற்கான விதிகளை காட்ட வேண்டும். பொதுக்குழுவில் முடிவுகளை காக்கின்ற அறங்காவலர்களாகத்தான் பிற நிர்வாகிகள் செயல்பட முடியும். பொதுக்குழுவில் செயல் திட்டத்தை முன் கூட்டியே தெரிவிக்க வேண்டும். பொதுக்குழுவில் சிலர் விருப்பத்திற்கேற்ப முடிவுகள் எடுக்க கூடாது” என்று  வாதிடப்பட்டது. 


நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்னிலையில் நடந்த இந்த விசாரணையின் போது, நீதிபதி “ பொதுக்குழுவில்  திடீரென யாராவது எந்த விவகாரத்தையாவது  எழுப்ப வேண்டுமென்றால்  என்ன செய்வது என்று ஓபிஎஸ் இடம் கேள்வி எழுப்பினார். கடந்த 3 மணி நேரமாக காரசாரமாக நடந்து வரும் இந்த விசாரணைக்கான தீர்ப்பு இன்னும் சற்று நேரத்தில் வெளியாக இருக்கிறது.