வருமான வரி மீதான வட்டியைச் செலுத்தத் தடை கோரிய நடிகர் சூர்யா தொடர்ந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.  2007-08 மற்றும் 2008-09ம் ஆண்டுக்கான வருமான வரி ரூ.3.11 கோடியை செலுத்த வருமானவரித்துறை உத்தரவு பிறப்பித்திருந்தது. ஆனால் மூன்று வருடங்களுக்குப் பிறகுதான் வருமான வரி கணக்கிடப்பட்டு வசூலிக்கப்பட்டது என்கிற அடிப்படையில் வரியின் மீதான வட்டியைக் கட்டுவதற்கு மட்டும் தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் 2018ல் வழக்கு தொடர்ந்திருந்தார் நடிகர் சூர்யா. இந்த வழக்கின் மீதான விசாரணை இன்று நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சுப்ரமணியம் தலைமையிலான அமர்வு நடிகர் சூர்யா தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்துள்ளது. 




வருமான வரி மதிப்பீடு செய்வதற்கு நடிகர் சூர்யாவின் தரப்பு ஒத்துழைக்காததால்தான் கணக்கிடுவதில் தாமதமானது என்று வருமானவரித்துறை தரப்பு நீதிமன்றத்தில் விளக்கியது. இதன் அடிப்படையில் சூர்யாவுக்கு வட்டியைத் தள்ளுபடி செய்யக்கோரும் உரிமையில்லை என்றும் வாதம் செய்தது. இதன் அடிப்படையில் நடிகர் சூர்யாவின் வழக்கைத் தள்ளுபடி செய்தார் நீதிபதி.


முன்னதாக இதே நீதிபதி தலைமையிலான அமர்வுதான் நடிகர்கள் விஜய் மற்றும் தனுஷ் தொடர்ந்த ரோல்ஸ் ராய்ஸ் கார் மீதான நுழைவு வரி ரத்து வழக்கையும் விசாரித்தது என்பது குறிப்பிடத்தக்கது.


இறக்குமதி வாகனங்களுக்கு நுழைவு வரி விதிக்க தடை விதித்து கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவின் அடிப்படையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஏராளமான வழக்குகள் போடப்பட்டுள்ளன. கேரள உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்த வழக்கில் உச்சநீதிமன்றம், நுழைவு வரி வசூலிக்க மாநில அரசுகளுக்கு  அதிகாரம் உள்ளது என்று கடந்த 2019ஆம் ஆண்டு தீர்ப்பளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு விதிக்கப்பட்ட நுழைவு வரியை எதிர்த்து நடிகர் தனுஷ் தொடர்ந்த வழக்கில் (05/08/2021) அன்று தீர்ப்பளிப்பதாக சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்திருந்தது. கடந்த ஐந்து ஆண்டுகளாக நிலுவையில் இருக்கும் நடிகர் தனுஷ் தொடர்ந்த இந்த வழக்கில் நீதிபதி எஸ்.சுப்ரமணியம் தலைமையிலான அமர்வு தீர்ப்பளித்திருந்தது. 


ஏற்கனவே நடிகர் விஜய் இதே காருக்கு வரி விலக்கு கேட்டு தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.சுப்பிரமணியம்,அவரது விபரங்களை மறைத்து மனு தாக்கல் செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்தததுடன், 1 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தார். மேலும் படத்தில் கருத்து பேசும் நடிகர்கள், வரி செலுத்துவதில் நேர்மையாக இருக்க வேண்டும் என்பது மாதிரியான கறார் கருத்துக்களையும் தெரிவித்திருந்தார்.


அதை எதிர்த்து விஜய் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ள நிலையில், அதே நீதிபதி முன்பு இன்று தனுஷ் வழக்கு வந்தது. 50 சதவீதம் வரி செலுத்திய நிலையில் எஞ்சியுள்ள வரியை செலுத்துவதாக தனுஷ் தரப்பில் கூறி, வழக்கை வாபஸ் பெற கோரிக்கை வைக்கப்பட்டது. 


 


அப்போது விஜய்க்கு வழங்கியது போலவே தனுஷிற்கும் கறாரான சில கருத்துக்களை நீதிபதி தெரிவித்தார், ரூ.50க்கு பெட்ரோல் போடும் பால்காரர் கூட ஜிஎஸ்டி வரி செலுத்தும் போது, நீங்கள் கட்டக்கூடாதா என கேள்வி எழுப்பிய நீதிபதி, அவர் என்றாவது நீதிமன்றத்தை நாடினாரா? நீங்கள் எத்தனை கார் வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளுங்கள்; ஆனால் அதற்கான வரியை செலுத்துங்கள். மக்கள் வரிபணத்தில் போடப்படும் சாலையில் பயணிக்கும் போது, அதற்கான வரிசை செலுத்த வேண்டியது தானே. என்ன பணயில் செய்கிறீர்கள் என்பதை ஏன் மனுவில் குறிப்பிடவில்லை? அது குறிப்பிட வேண்டிய கட்டாயமல்லவா என்று கடிந்து கொண்ட நீதிபதி, நுழைவு வரியில் இருந்து விலக்கு கேட்டு வழக்கு தொடர்ந்த பின், எதற்கு வாபஸ் பெற வேண்டும்? என்றும் கேள்வி எழுப்பினார்.  எவ்வளவு வரி செலுத்த வேண்டும் என மதியம் 2:30 மணிக்குள் வணிகவரித்துறையினர் தகவல் தெரிவிக்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.