சிவகங்கை தொகுதி காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் திண்டுக்கல்லில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், 

 

பாஜக கூட்டணியில் உள்ள மூன்று கட்சிகள் கூட எல்ஐசி தனியார் மயம் ஆக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அதிமுக  மத்திய அரசுக்கு ஆதரவான  நிலைப்பாட்டை எடுத்துள்ளது. இதற்கு ஓபிஎஸ், ஈபிஎஸ் பதில் கூறி இருக்க வேண்டும் ஆனால் இன்றுவரை இதற்கு அதிமுக தரப்பிலிருந்து எந்த பதிலும் கிடையாது. பாஜகவின் அடிமையாக அதிமுக செயல்பட்டு வருகிறது.  ஆனால் தமிழகத்தில் இரட்டை வேடம் போட்டு வருகிறது. எல்.ஐ.சியை தனியார் மயமாக்க கூடாது.

 

கடந்த 10 ஆண்டுகள் தமிழகத்தை ஆட்சி செய்த அதிமுக அரசு தமிழகத்தின் பொருளாதாரத்தை தொலைத்துவிட்டது அதைத்தான் திமுக ஒரு வெள்ளை அறிக்கையாக வெளியிட்டது. இந்த வெள்ளை அறிக்கையின் மூலம் தமிழ் நாட்டின் உண்மையான பொருளாதார நிலை மக்களுக்கு தெளிவாக கூறப்பட்டுள்ளது. திமுக தேர்தல் பிரச்சாரத்தின் போது கூறியதுபோல் பெட்ரோல் லிட்டருக்கு 3 ரூபாய் குறைத்து இந்தியாவிற்கு முன்னுதாரணமாக  திகழ்கிறது. திமுக அரசு பொறுப்பேற்று 100 நாட்கள் சிறப்பாக செயல்பட்டுள்ளது. 

 

பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியை சேர்ந்த எம்பிக்கள் கருத்துக்களைக் கூற வாய்ப்புகள் மறுக்கப்படுகிறது. ஆப்கானிஸ்தானில் அங்குள்ள மக்களை தாலிபான் தீவிரவாதிகளுக்கு பலிகடாவாக விட்டுச் சென்றுள்ளது அமெரிக்கா. இதன் காரணமாக இந்தியாவில் பெரிய பாதிப்பு ஏற்படும். ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு எவ்வித உரிமையும் இருக்காது. பெரிய அளவில் மனித உரிமைகள் மீறப்படும் ஆப்கானிஸ்தான் தீவிரவாதிகளுக்கும் இந்தியாவில் உள்ள பல தீவிரவாத அமைப்புகளுக்கும் இடையே கண்டிப்பாக தொடர்பு ஏற்படும்.

 

இதனால் இந்தியாவிற்கு பெரிய அளவில் அச்சுறுத்தல் வரும். பாகிஸ்தானை கூட தாலிபான்கள் கைப்பற்றும் என்ற சந்தேகம் எனக்கு உள்ளது சீனாவின் விளையாட்டு இப்போதே ஆரம்பமாகிவிட்டது. தாலிபான்களுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என சீனா கூறியிருப்பது இந்தியாவிற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும், ஆகவே இந்தியா விழிப்புடன் இருக்க வேண்டும்.

 

பொகசஸ் மென்பொருளை மத்திய அரசு வாங்கியதா இல்லையா என்பதை எதிர்க்கட்சிகள் பல முறை கேள்வி எழுப்பியும் இதுவரை மத்திய அரசு பதில் சொல்ல மறுத்து வருகின்றது. பிரதமர் மோடி இமாலய பொய்களை திரும்ப திரும்ப சொல்லி வருகிறார். தமிழகத்திற்கு நீட் தேர்வு தேவையில்லை ஆனால் நடைமுறையில் பார்க்கும்போது நீட் தேர்வு தவிர்க்கமுடியாத ஒன்று மெடிக்கல் கவுன்சில் ஆஃப் இந்தியா உரிமத்தோடு தான் மெடிக்கல் கல்லூரிகள் நடத்த வேண்டும். இந்தாண்டு நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு பெற முடியவில்லை வருங்காலங்களில் சட்டரீதியாக விளக்கு பெற தமிழக அரசு முயற்சி செய்வார்கள்