சென்னை விமான சாகச நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலால் 5 பேர் உயிரிழந்த விவகாரத்தில், மக்களைக் காக்க வேண்டியது அரசின் கடமை எனவும் அதைச் செய்யாதது உளவுத் துறையின் தோல்வி என்றும் இது கையலாகாத்தனம் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் ஈபிஎஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.


5 பேர் பலி, 102 பேர் மருத்துவமனையில் அனுமதி


சென்னை மெரினா விமான சாகச நிகழ்ச்சியைக் காணச் சென்ற பொதுமக்களில் 5 பேர் வெயில் மற்றும் கூட்ட நெரிசல் காரணமாக உயிரிழந்தனர். 102 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்றனர். அரசு உரிய முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளைச் செய்யாததே இதற்குக் காரணம் என்று எதிர்க் கட்சிகளும் பொது மக்களும் குற்றம் சாட்டுகின்றனர்.


இந்த நிலையில், வான் சாகச நிகழ்ச்சி உயிரிழப்புக்கு திமுக அரசே காரணம் என்று எதிர்க் கட்சித் தலைவரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து இன்று சேலத்தில் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:


சாகச நிகழ்ச்சிக்கு வந்த பொது மக்கள் அருந்த போதிய குடிநீர் வசதி செய்யப்படவில்லை. அடிப்படை வசதி செய்துகொடுக்காத காரணத்தால், மக்கள் பெரும் துன்பத்துக்கு ஆளாகினர். கூட்ட நெரிசலில் சிக்கி, நூற்றுக்கணக்கானோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.


நிகழ்ச்சியில் எவ்வளவு பேர் கூடுவார்கள் என்று தகவலை உளவுத் துறை மூலம் பெற்று, அதற்குத் தக்க ஏற்பாடுகளைச் செய்திருந்தால், இத்தனை பிரச்சினை ஏற்பட்டிருக்காது.


பொம்மை முதல்வரே காரணம்


முதலமைச்சர் அறிவிப்பை வெளியிட்டுவிட்டு போதிய ஏற்பாடுகளை செய்யாமல் விட்டது அவரின் செயலற்ற தன்மை, கையாலாகாத தனத்தைக் காட்டுகிறது. இது வெட்ககேடான விஷயம். இதே விமான சாகச நிகழ்ச்சியை பல்வேறு மாநிலங்கள் வெற்றிகரமாக நடத்தியுள்ளன. ஆனால் தமிழகத்தில் அப்படி நடக்கவில்லை. திறமையற்ற பொம்மை முதல்வர் செயல்பட்டு வரும் காரணத்தால், இவ்வாறு நடந்துள்ளது.


செய்யத் தவறிய திமுக அரசு


மக்களைக் காப்பதுதான் அரசின் கடமை. இது உளவுத்துறையின் தோல்வி. இதைச் செய்யத் தவறியது திமுக அரசு. முதல்வர் ஸ்டாலின்தான் நிகழ்ச்சியைக் கண்டுகளியுங்கள் என்று அறிவிப்பை வெளியிட்டார். அறிவிப்பை வெளியிட்டுவிட்டு, போதிய முன்னேற்பாடுகளைச் செய்யவில்லை. 


அதிமுக ஆட்சிக் காலத்தில் திமுக அரசியல் செய்யவில்லையா? அரசே இந்த உயிரிழப்புகளுக்குக் காரணம். இழப்பீடுகள் எந்த வகையிலும் போதாது.  விலைமதிப்பற்ற உயிர்களுக்கு அவை எவ்விதத்திலும் ஈடாகாது’’ . 


இவ்வாறு எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.