பரபரப்பான அரசியல் சூழலுக்கு இடையே நாளை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் தலைமைச் செயலகத்தில் நடைபெறுகிறது. இதில், தமிழ்நாட்டில் மதுக் கடைகளின் எண்ணிக்கையை குறைப்பது உள்ளிட்ட முக்கிய முடிவுகள் எடுக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.


புதிய அமைச்சர்களுடன் கூட்டம்


தமிழக அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டப்பிறகு நடைபெறும் முதல் கூட்டம் இது என்பதால் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. குறிப்பாக, செந்தில்பாலாஜி சிறையில் இருந்து வந்த பிறகு நடக்கும் முதல் கூட்டமும் இதுவே. எனவே, இந்த அமைச்சரவை கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படவுள்ளன.


சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை ஆண்டுகளே உள்ள நிலையில், பொதுமக்களை கவரும் விதமாகவும் குறிப்பாக பெண்கள் வாக்குகளை அறுவடை செய்யும் வகையிலும் திமுக வாக்குறுதியான படிப்படியாக மதுவிலக்கு என்ற கொள்கைபடி, தமிழ்நாட்டில் உள்ள டாஸ்மாக் மதுபான கடைகளின் எண்ணிக்கையை குறைப்பது தொடர்பான முக்கிய முடிவை அமைச்சரவை கூட்டத்தில் வைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் எடுக்கவுள்ளதாக கூறப்படுகிறது.


திருமாவளவன் கோரிக்கை ஏற்பா ?


சமீபத்தில் மது விலக்கு மாநாட்டை நடத்திய விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்தினார். அதேவேளையில் திமுகவும் தன்னுடைய பிரதிநிதிகளாக ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோரை திருமாவளவன் நடத்திய மது விலக்கு மாநாட்டிற்கு அனுப்பி வைத்தது. இந்நிலையில், மதுவை அரசே விற்பனை செய்வதில் திமுகவிற்கு கொள்கைரீதியாக உடன்பாடி இல்லை என்பதை நிரூபணம் செய்யும் வகையில், மதுக்கடைகளின் எண்ணிக்கையை குறைக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் விரும்புவதாகவும் அது குறித்து விவாதித்து நாளைய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது.


500 மதுக்கடைகள் குறைப்பா ?


அதனடிப்படையில், பிரச்னைக்குரிய இடங்களில் இருக்கும் 500 டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகளை மூட நாளைய அமைச்சரவையில் கூட்டத்தில் கொள்கை முடிவு எடுக்கப்பட்டு ஒப்புதல் அளிக்கப்படவுள்ளதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


உதயநிதிக்கு கூடுதல் அதிகாரமா ?


மேலும், துணை முதலமைச்சராக உதயநிதி நியமிக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு முதல்வரின் பணிச் சுமையை குறைக்கும் வகையில் கூடுதல் அதிகாரங்களை வழங்க ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக, உள்துறை தொடர்பான முடிவுகளை முதல்வரே எடுத்து வரும் வகையில், அந்த துறையின் முக்கிய முடிவுகளை இனி உதயநிதி ஸ்டாலினிடம் ஆலோசித்து எடுக்கும் நிலை உருவாக்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது.


சட்டம் மற்றும் ஒழுங்கு பிரச்னை என்பது மிகுந்த முக்கியத்துவமான பிரச்னை என்பதால், தமிழ்நாட்டில் தேர்தல் நெருங்கும் சமயத்தில் எந்த ஒரு பெரிய பிரச்னையும் வந்துவிடாதபடி பார்த்துக்கொள்ள வேண்டுமென்பதால், அந்த பொறுப்பையும் முதல்வரோடு சேர்ந்து உதயநிதி கவனிப்பார் என்று தெரிகிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின் இனி மக்கள் நலத் திட்டங்கள் அதிக அளவில் செயல்படுத்துவதிலும் அதனை நடைமுறைப்படுத்துவதிலும் கூடுதல் முனைப்பு காட்டுவார் என கூறப்படுறது


தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல் வழங்கப்படுகிறது.


முதல்வர் வெளிநாடு சென்று திரும்பிய பிறகு நடக்கும் கூட்டம் இது என்பதால், புதிய தொழில் முதலீடுகளை தமிழ்நாட்டில் அனுமதிப்பது குறித்து விவாதித்து அதற்கு இந்த அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்படுகிறது. மேலும், தமிழ்நாடு அரசின் துறை சார்ந்த கொள்கைகள், முடிவுகளும் அமைச்சரவை முன் வைக்கப்பட்டு, அது தொடர்பாகவும் அலோசிக்கப்பட்டு அதற்கான ஒப்புதல்கள் வழங்கப்படுகின்றன.