சென்னை, செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், காஞ்சிபுரம் உள்ளிட்ட வட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்தார்.


இதுகுறித்து செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறியதாவது:
அடுத்த 24 மணி நேரத்திற்கு கடலூர், டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதி கனமழைக்கு வாய்ப்புள்ளது. அடுத்த 3 நாட்கள் தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. நேற்று தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி சற்று வலுப்பெற்று இன்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மையம் கொண்டுள்ளது.


இது தொடர்ந்து வடமேற்கு பகுதியில் தமிழகம், புதுவையையொட்டி நகரக்கூடும். பின்னர் தமிழகம், கேரளப் பகுதியைக் கடந்து அரபிக் கடல் பகுதிக்குச் செல்லக்கூடும். கடந்த 24 மணி நேரத்தில் பெரும்பாலான இடங்களில் கனமழை பெய்துள்ளது. 21 இடங்களில் கனமழை பெய்துள்ளது. அதிகபட்சமாக மயிலாடுதுறை, கொள்ளிடத்தில் 11 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. தமிழகம், காரைக்கால், புதுச்சேரியில் பெரும்பாலும் மழை பெய்ய வாய்ப்புள்ளது. கடலூர் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகனமழை பெய்யக்கூடும். 


சென்னை, செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், மேற்கு தொடர்ச்சி மலையையொட்டியுள்ள பகுதியில் கனமழையும் பெய்யக்கூடும். மீனவர்களுக்கான எச்சரிக்கையைப் பொறுத்தவரை குமரிக் கடல், மன்னார் வளைகுடா, தென்மேற்கு வங்கக் கடல் பகுதி, மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் பலத்த காற்றானது வீசக்கூடும். இது 40 கீ.மீ. வேகத்தில் இருக்கும். சென்னையைப் பொறுத்தவரை நுங்கம்பாக்கத்தில் 7 செ.மீ. மழை பதிவாகியுள்ளது என்று பாலச்சந்திரன் தெரிவித்தார்.


முன்னதாக,  வட தமிழக கடலோர மாவட்டங்களுக்கு இந்திய வானிலை மையம் இன்று ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.


சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட வட கடலோர மாவட்டங்களில் இன்று அதிகனமழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


TN LIVE: "அடுத்த 3 நாட்களுக்கு தமிழ்நாடு, காரைக்காலின் பெரும்பாலான இடங்களில் மழை"


கனமழை காரணமாக இன்று நடைபெறவிருந்த சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று பல்கலை. பதிவாளர் அறிவித்துள்ளார்.


சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட தமிழகத்தில் 20 மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் ஆகிய பகுதிகளில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.