சென்னை மெரினா கடற்கரையில் கடலுக்கு நடுவே கருணாநிதியை போற்றும் வகையில், பேனா நினைவுச் சின்னம் அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. மத்திய கடலோர ஒழுங்குமுறை ஆணையம் 15 நிபந்தனைகள் உடன் இந்த அனுமதியை வழங்கியுள்ளது. சுற்றுச்சூழல் மதிப்பீட்டுக் குழு ஒப்புதல் தந்த நிலையில், கடலோர ஒழுங்குமுறை ஆணையமும் அனுமதி வழங்கியுள்ளது. இதனால், திமுக தொண்டர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவாக சென்னை மெரினா கடற்கரையில் ரூ.81 கோடி செலவில் பேனா சின்னம் அமைய உள்ளது. 


நிபந்தனைகள் என்ன?



  • கட்டுமானம் தொடங்குவதற்கு முன் திட்டம் தொடங்க உள்ள இடத்தில் இருந்து 800 மீட்டர் தொலைவில் உள்ளஐஎன்எஸ் அடையாறு கடற்படை தளத்தில் தடையில்லா சான்றிதழ் பெற வேண்டும்

  • மண் அரிப்பு குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும்

  • கட்டுமான பணிகளுக்காக எந்த ஒரு நிலையிலும் நிலத்தடி நீரை பயன்படுத்தக்கூடாது

  • பார்வையாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும்போது அதனை நிர்வகிப்பதற்கான திட்ட அறிக்கை தயாரிக்க வேண்டும்

  • தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திடம் ஒவ்வொரு ஆண்டும் சுற்றுச்சூழல் அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும்

  • நிபந்தனைகள் நிறைவேற்றப்பட்டிருப்பது குறித்த தகவல்களை பொதுப்பணித்துறை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்

  • நீதிமன்றம் மற்றும் தீர்ப்பாயத்தின் எந்த உத்தரவும் அல்லது வழிகாட்டுதலும் கண்டிப்பாக பின்பற்றப்பட வேண்டும்

  • திட்டத்தை செயல்படுத்தும்போது நிபுணர் குழு அமைத்து கண்காணிக்க வேண்டும்

  • அவசரகால மீட்புப் பணி  தொடர்பான விரிவான திட்டம் தீட்டப்பட வேண்டும்

  • ஆமை இனப்பெருக்க காலத்தில் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளக் கூடாது

  • தற்போது வழங்கப்பட்டுள்ள அனுமதி கடிதம் தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் இறுதி உத்தரவுக்கு கட்டுப்பட்டது. உள்ளிட்ட நிபந்தனைகள் அனைத்தையுமே உரிய முறையில் பின்பற்ற வேண்டும், தவறினால் அனுமதி ரத்து செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


திமுக அரசின் திட்டம்:


மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் எழுத்தாற்றலை நினைவுகூரும் வகையில், மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தின் பின்புறம், வங்கக்கடலில் பேனா வடிவ நினைவுச் சின்னம் ரூ.81 கோடியில் அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இந்த நினைவுச் சின்னம் அமைப்பதற்கான பொதுமக்கள் கருத்துக் கேட்பு கூட்டம் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் கடந்த ஜனவரி மாதம் நடைபெற்றது. அதில் பெரும்பாலானோர் திட்டத்தை செயல்படுத்த ஆதரவு அளித்தனர்.


கடும் எதிர்ப்பு:


இதையடுத்து திட்டம் தொடர்பான மாதிரி வரைபடம் உள்ளிட்ட விவரங்கள் வெளியிடப்பட்டன. அதற்கு அதிமுக மற்றும் நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மற்றும் பூவுலகின் நண்பர்கள் உள்ளிட்ட அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இயற்கை வளத்தை அழித்து தான் கருணாநிதிக்கு நினைவுச் சின்னம் அமைக்க வேண்டுமா எனவும் கேள்வி எழுப்பின. இந்நிலையில் தான், கடலுக்கு நடுவே பேனா நினைவுச் சின்னம் அமைக்க நிபந்தனைகள் உடன் மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.


ALSO READ: Vijay: இரட்டை வேடம் போடுகிறாரா நடிகர் விஜய்? சொல்வது ஒன்று, செய்வது ஒன்றா?- லியோ சிகரெட் காட்சியால் எழும் எதிர்ப்புகள்