பிளஸ் 2 முடித்து கல்லூரியில் சேராமல் இடைநின்ற மாணவர்களுக்காகத் தமிழக அரசு சார்பில் நான் முதல்வன் திட்டம் மூலம் நாளை (அக்.28) சிறப்பு முகாம் நடைபெறுகிறது. 


கடந்த 2021 - 22ஆம் கல்வியாண்டில் 12ஆம் வகுப்பு முடித்த மாணவர்களில் பெரும்பாலானோர், மருத்துவம், பொறியியல், கலை, அறிவியல், சட்டம், வேளாண்மை என தங்களுக்கு உகந்த துறை சார்ந்த படிப்புகளில் இணைந்துள்ளனர். எனினும் சூழல் காரணமாக சில மாணவர்கள் இன்னும் கல்லூரிகளுக்குச் செல்லாமல், வேலை பார்க்க வேண்டியுள்ளது.


இடைநின்ற மாணவர்களின் உயர் கல்வியை உறுதி செய்ய, தமிழக அரசு சார்பில் இதுவரை இரண்டு முறை சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. 3 ஆவது முறையாக நாளை காலை 10 மணிக்கு அவரவர் படித்த பள்ளிகளிலேயே சிறப்பு உயர் கல்வி முகாம்கள் நடைபெற உள்ளன. இந்த முகாம்களில் கல்லூரி சேர்க்கைக்காக முறையான வழிகாட்டுதல்களும் ஆலோசனைகளும் வழங்கப்பட உள்ளன.


இந்த முகாமில் மாணவர்களின் கண் முன்னே உள்ள பல்வேறு வாய்ப்புகளை மாணவர்களுக்கு எடுத்துச் சொல்வதுடன் உயர் கல்வியின் அவசியமும் எடுத்துரைக்கப்பட உள்ளது. இதுவரை கல்லூரியில் சேராத தங்கள் வகுப்பு மாணவர்களை அழைத்துக் கொண்டு வரும்போது, அவர்கள் குறித்த தகவல்களை பள்ளி தலைமை ஆசிரியருக்கு அளிக்கும்படி, கல்லூரியில் சேர்ந்த மாணவர்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.


யார் ஆலோசனை வழங்குவர்?


அரசுப் பள்ளிகளில் படித்து முடித்து, உயர் கல்வி குறித்த வழிகாட்டுதல் வேண்டி வரும் மாணவர்களுக்கு, சிறப்புப் பயிற்சி பெற்ற முதன்மை பயிற்சியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் மூலம் ஆலோசனை வழங்கப்பட உள்ளது. இவை அனைத்தும் அவரவர் பயின்ற அரசுப் பள்ளிகளிலேயே வழங்கப்பட உள்ளது. 


இந்த ஆலோசனை அக்டோபர் 28ஆம் தேதி காலை 10 மணிக்கு மாநிலம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் தொடங்கி நடைபெற உள்ளது. 


 ‘நான் முதல்வன்’ திட்டம்


மாணவர்கள், இளைஞர்களை முதல்வனாக மாற்றுவதே இத்திட்டத்தின் நோக்கம்.  தமிழகத்தின் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் மற்றும் இளைஞர்கள், படிப்பில் மட்டுமல்லாது, வாழ்க்கையிலும் வெற்றியாளராக்கும் வகையில் திறன் மேம்பாடு மற்றும் வழிகாட்டுதல் திட்டம் இது.






இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கம், ஆண்டுக்குப் பத்து லட்சம் இளைஞர்களைப் படிப்பில், அறிவில், சிந்தனையில், ஆற்றலில், திறமையில் மேம்படுத்தி நாட்டுக்கு வழங்குதல் ஆகும். இந்தத் திட்டத்தின் சிறப்பம்சமானது, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழக மாணவ, மாணவியர்களின் தனித் திறமைகளை அடையாளம் கண்டு அதனை மேலும் ஊக்குவிப்பது ஆகும்.


அடுத்தடுத்து அவர்கள் என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம், எப்படிப் படிக்கலாம் என்றும் வழிகாட்டப்படும். தமிழில் தனித் திறன் பெற சிறப்புப் பயிற்சியுடன் ஆங்கிலத்தில் எழுதவும், சரளமாகப் பேசுவதற்கும், நேர்முக தேர்வுக்கு தயாராவது குறித்தும் பயிற்சிகள் வழங்கப்படும். தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு Coding, Robotics போன்ற பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும். ஒவ்வொரு துறையிலும் தலைசிறந்த சாதனையாளர்களைக் கொண்டு கோடை சிறப்பு வகுப்புகள் நடத்தப்படும்.


ஒவ்வொரு துறையிலும் தலைசிறந்த சாதனையாளர்களைக் கொண்டு கோடை சிறப்பு வகுப்புகள் நடத்தப்படும். மனநல மருத்துவர்கள், உடல்நல மருத்துவர்களைக் கொண்டு திடமான உணவு வகைகள் உட்கொள்வது குறித்து ஆலோசனைகள் வழங்குவதுடன், உடற்பயிற்சி, நடை, உடை, நாகரீகம், மக்களோடு பழகுதல், ஆகியவை குறித்தும் பயிற்சிகள் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.