கிருஷ்ணகிரியில் பிரபல நகைக்கடை உரிமையாளர் தனது வீட்டில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


கிருஷ்ணகிரி மாவட்டம் பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஜுவல்லரி எனும் பிரபல நகைக்கடை செயல்பட்டு வருகிறது. இதன் உரிமையாளராக டி.எம்.சுரேஷ் இருந்து வந்தார். இவரை போன்று இவரது சகோதரர்களும் கிருஷ்ணகிரியில் நகைக்கடைகள் மற்றும் துணிக்கடைகள் நடத்தி வருகின்றனர். மேலும் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்த டி.எம்.சுரேஷ் கிருஷ்ணகிரி நகர வணிகர் சங்கத்தின் தலைவராகவும் இருந்து வந்தார். இவர் தனது குடும்பத்துடன் காந்தி நகர் பகுதியில் வசித்து வந்தார்.


இந்தநிலையில் இன்று காலை 7 மணியளவில் வழக்கம்போல வீட்டில் உள்ள தனது அறையில் டி.எம்.சுரேஷ் இருந்துள்ளார். அப்போது திடீரென துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் ஓடிச்சென்று சுரேஷ் இருந்த அறையில் பார்த்துள்ளனர். அப்போது அங்கு அவர் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்தார். உடனடியாக கிருஷ்ணகிரி காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் உயிரிழந்த சுரேஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 


மேலும் சம்பவம் நடந்த இடத்தில் தடவியல் துறை வருகை புரிந்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சுரேஷ் தற்கொலை செய்துக்கொண்ட நிலையில் போலீசார் என்ன காரணம் என தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் தற்கொலை செய்துக் கொண்டது குறித்த காரணம் இதுவரை தெரிய வரவில்லை. இரவு வழக்கம்போல குடும்பத்தினருடன் பேசிக் கொண்டிருந்த சுரேஷ், காலையில் தற்கொலை செய்துக் கொண்டதாக குடும்பத்தினர் போலீசாரிடம் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அவருக்கு சமீபகாலமாக நிலம் முதலீடு மற்றும் கொடுத்தல் வாங்கல் பிரச்சனை நிலவி வந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 




வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் :104.

 

சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,

எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,

சென்னை - 600 028.

தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)