சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து அமைச்சர் பொன்முடியை விடுவித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


பொன்முடி விடுதலை:


அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக 2011ல் லஞ்ச ஒழிப்புத்துறையால் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விழுப்புரம் முதன்மை அமர்வு நீதிமன்றம் விசாரித்து வந்தது. கடந்த 2022ம் ஆண்டு நவம்பர் மாதம் அந்த வழக்கு வேலூர் முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு வழக்கு விசாரணை நடத்தப்பட்டது. இந்நிலையில், வழக்கிலிருந்து அமைச்சர் பொன்முடியை விடுவித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழக்கில் முகாந்திரம் இல்லை எனவும், போதிய ஆதாரங்கள் இல்லாத காரணத்தால், உயர்கல்வி அமைச்சர் மற்றும் அவரது மனைவியையும் விடுவிப்பதாக வேலூர் முதன்மை அமர்வு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.


வழக்கு விவரம்:


2006ஆம் ஆண்டு முதல் 2011ஆம் ஆண்டு வரை திமுக ஆட்சியில் இருந்தபோது, அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி இருவரும் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக 2011ஆம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது. விழுப்புரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு கன்னியப்பன் இந்த வழக்கைத் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் நூற்றுக்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அதில், அமைச்சர் பொன்முடியும் அவரது மனைவி விசாலாட்சியும் ரூ.1.36 கோடிக்கு மேல் வருமானத்துக்கு அதிகமான சொத்துக்களைக் குவித்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.


வழக்கு கடந்து வந்த பாதை:


முதலில், விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்திலும், பின்னர் 2015ஆம் ஆண்டு முதல் விழுப்புரம் லஞ்ச ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்திலும் இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வந்தது. கடந்த 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இந்த வழக்கு வேலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. பல கட்டங்களாக விசாரணை நடைபெற்ற நிலையில்,  அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்து தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.


மனைவியுடன் ஆஜரான அமைச்சர்:


இந்நிலையில், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்க்கப்பட்டதாக லஞ்ச ஒழிப்புத்துறையால் தொடரப்பட்ட,  சொத்துக்குவிப்பு வழக்கில் இன்று தீர்ப்பளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதைதொடர்ந்து,  அமைச்சர் பொன்முடி  தனது மனைவியுடன் நீதிமன்றத்தில் ஆஜரானார். அப்போது சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து அமைச்சர் பொன்முடியையும் அவரது மனைவி விசாலாட்சியையும் விடுதலை செய்து வேலூர் நீதிமன்றம் நீதிபதி உத்தரவிட்டார். போதிய ஆதாரங்கள் இல்லாத காரணத்தால், வழக்கில் முகாந்திரம் இல்லை எனவும் கூறி  அமைச்சர் பொன்முடியும் அவரது மனைவியும் விடுதலை செய்வதாக நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார். இதனால் பொன்முடி மற்றும் திமுக தொண்டர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.