Breakfast Scheme: காலை உணவு திட்டத்தை விரிவாக்கம் செய்வதன் மூலம், கூடுதலாக 2.23 லட்சம் மாணவர்கள் பயனடைவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


முதல்வர் காலை உணவு திட்டம்:


தமிழ்நாட்டில் உள்ள அரசு தொடக்கப்பள்ளிகள் அனைத்திலும் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் அனைத்து குழந்தைகளுக்கும், காலையில் உணவளிக்கும் திட்டத்தை, முதலமைச்சர் ஸ்டாலின் கடந்த 2022ம் ஆண்டு தொடங்கி வைத்தார்.  இந்நிலையில் அந்த திட்டத்தை விரிவிபடுத்தி, அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளிகளிலும் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கும் காலை உணவளிக்கப்படும் என சட்டப்பேரவையில் அறிவிக்கப்படது. அதன்படி, ”முதல்வர் காலை உணவு திட்டம்” இன்று விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.


திட்டத்தை தொடங்கி வைத்த முதலமைச்சர் ஸ்டாலின்:


திட்ட விரிவாக்கத்தின் மூலம் புதியதாக, அரசு உதவி பெறும் 3,995 அரசு உதவி பெறும் தொடக்க பள்ளிகளில், முதல்வர் காலை உணவு திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் மேலும் 2.23 லட்சம் மாணவர்கள் பயன் பெறுவார்கள் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியம், கீழச்சேரி கிராமத்தில் உள்ள புனித அன்னாள் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியில், காலை உணவு திட்டத்தின் விரிவாக்க நடவடிக்கையை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.  அப்போது மாணவர்கள் உடன் அருந்தி உணவு உண்டதோடு, அருகில் இருந்த சிறுமிக்கு உணவை ஊட்டி மகிழ்ந்தார். இதன் மூலம் தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் தொடக்க பள்ளிகள் அனைத்திலும், முதல்வர் காலை உணவு திட்டம் அமலுக்கு வந்துள்ளது.


அதிகரிக்கும் வருகை பதிவு:


முதல்வர் காலை உணவு திட்டம் முதற்கட்டமாக 1,545 பள்ளிகளில் அமல்படுத்தியதன் மூலம்,  1.14 லட்சம் மாணவர்கள் பயனடைந்தனர். திட்டத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில் கடந்தாண்டு அக்டோபர் 25ம் தேதி, திருக்குவளையில் இத்திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டு 30,992 அரசு தொடக்கப் பள்ளிகளிலும் நடமுறைக்கு கொண்டு வரப்பட்டது. இதன் காரணமாக,  18.50 லட்சம் மாணவர்கள் பயன்பெற்றனர். ‘காலை உணவு’ திட்டத்த்தால் மாணவர்களின் பள்ளி வருகை என்பது கணிசமாக உயர்ந்து வருகின்றது. அதன்படி, இந்த திட்டத்தை தெலங்கானாவிலும், கனடாவில் ‘தேசிய உணவு திட்டம்’ என்ற பெயரிலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.


இது முதலமைச்சர் ஸ்டாலினின் கனவு திட்டம் என கூறப்படுகுறது. மாணவர்களின் வருகைப்பதிவை அதிகரிப்பதோடு, இளம் வயதில் ஏற்படும் ஊட்டச்சத்து குறைபாட்டை தடுக்கும் நோக்கில் இந்த திட்டத்தை செயல்படுத்துவதாக முதலமைச்சர் ஸ்டாலின் பல இடங்களில் தெரிவித்துள்ளார்.