ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் மதுரைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள நிலையில், சாலைகளை சரிசெய்து, தெருவிளக்குகளை சரிபார்க்கும்படி மாநகராட்சி துணை ஆணையர் சண்முகம் சுற்றறிக்கை வெளியிட்டிருந்தார். இந்த சுற்றறிக்கை சமூகவலைத்தளங்களில் வைரல் ஆன நிலையில், தமிழக எம்.பிக்கள் சு.வெங்கடேசன் மற்றும் மாணிக்கம் தாகூர் ஆகியோர் தங்கள் எதிர்ப்பை ட்விட்டரில் பதிவு செய்தனர். இந்த நிலையில் மதுரை மாநகராட்சி துணை ஆணையர் சண்முகத்தை தமிழக அரசு பணியில் இருந்து விடுவித்த்தை கண்டித்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிக்கைவெளியிட்டுள்ளார். அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில்,



ராஷ்டிரிய சுயம்சேவக் அமைப்பின் அகில இந்திய தலைவர் மோகன் பகவத் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து அமைப்பின் நிர்வாகிகளையும் பொதுமக்களையும் சந்திப்பது வழக்கமான ஒன்று. ஆங்காங்கே ஆலோசனை கூட்டங்களிலும் பங்கேற்பார். இவருக்கு உயர்மட்ட பாதுகாப்பான இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்படுகிறது. 


உலகின் பெரிய சேவை அமைப்புகளில் ஆர்.எஸ்.எஸ் முதன்மையாக திகழ்கிறது. அரசியலுக்கு அப்பாற்பட்டு இந்திய தேசத்தின் வளர்சிக்கும், இந்திய மக்களின் உயர்வுக்கும் சேவை ஆற்றுகிற அமைப்பாகா ஆர்.எஸ்.எஸ்.விளங்குகிறது


மோகன் பகவத் மதுரை, கன்னியாகுமரி பகுதிகளில் ஜூலை 22 முதல் 26 வரை பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து பங்கேற்கிறார். இவர் மதுரை வருகைக்கான ஏற்பாடுகளை அங்கு உள்ள அரசு அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர். நாட்டின் அதி உயர் பாதுகாப்பு கொண்ட தலைவர் வருகையின்போது வழக்கமாக என்னென்ன நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமோ அதை பின்பற்றி மதுரை மாந்கராட்சி நிர்வாகிகள் செயல்பட்டுள்ளனர். 



இதற்கென மதுரை துணை ஆணையர் சண்முகம், மாநகராட்சி அதிகாரிகளுக்கு பராமரிப்பு பணிகள் குறித்டு ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். இதற்காக தமிழக அரசு அவரை பணி விடுப்புசெய்துள்ளது மிகவும் வருந்தத்தக்கது. கண்டிக்கத்தக்கது.


யார் யார் வந்தால் என்னென்ன பராமரிப்பு, பாதுகாப்பு என்பதற்கு தமிழக அரசு தனியாக பட்டியல் வைத்து இருக்கிறதா? பாதுகாப்பு பட்டியலில் இருக்கும் தலைவர்கள் வரும்போது அவர்களுக்கு உரிய வசதி செய்து கொடுப்பது சட்டவிரோதமானதா?


இந்த நடவடிக்கையின் மூலம் அரசு அதிகாரிகள் எந்த வகையில் செயல்பட வேண்டும் எனறு தமிழக அரசு விரும்புகிறது என்று புரியவில்லை.


திமுகவின் சாமானிய தலைவர்கள் சென்றால் கூட, மாநகராட்சி அதிகாரிகளே நேரில் சென்று சாலை சீரமைப்பு, அனைத்து விதமான பராமரிப்பு பணிகள் மேற்கொள்வது, ஆனால் அரசு தாங்கள் விரும்பாத அமைப்பின் மிக முக்கியமான தலைவர் வருகைக்கான ஏற்பாடுகளை வழக்கம்போல் செய்த அதிகாரிக்கு தண்டனை கொடுப்பது நியாயமா? மேலும் இத்தகைய நடவடிக்கை தவறான முன்னுதாரணம் ஆகிவிடும்.


தமிழக அரசு நேர்மையாக பாரபட்சமின்றி நடந்து கொள்வதை உறுதிசெய்ய வேண்டும் என்றால் துணை ஆணையர் சண்முகம் பணிவிடுப்பு ரத்து செய்யப்பட வேண்டும். இல்லையென்றால் திமுக ஆட்சியின் ஒருதலைப்பட்சமான செயலையும், அதிகரிகளை பழிவாங்குகின்ற செயலையும் மக்கள் மன்றத்திற்கு எடுத்துச் செல்லப்படும் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.