பில்கிஸ் பானு வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பு நம்பிக்கை அளிப்பதாக முதலமைச்சர் ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ”சகோதரி பில்கிஸ் பானு வழக்கில் இறுதியில் நீதி நிலைநாட்டப்பட்டு இருப்பது ஆறுதல் அளிக்கிறது. இருள் சூழ்ந்த வேளையில் நம்பிக்கை தரும் ஒளிக்கீற்றாக உச்சநீதிமன்றத் தீர்ப்பு அமைந்திருக்கிறது. குஜராத் மாநில பா.ஜ.க. அரசு, உண்மைகளை மறைத்து குற்றவாளிகளுக்கு உடந்தையாக இருந்திருக்கிறது என்று உச்சநீதிமன்றம் இடித்துரைத்திருப்பது, அரசியல் இலாபங்களுக்காக நீதி வளைக்கப்பட்டதை வெளிச்சம் போட்டுக் காட்டி இருக்கிறது.


தங்களுக்கு வேண்டியவர்கள் என்றால் உண்மைகளை மறைத்து, நீதிமன்றத்தையே தவறாக வழிநடத்தி கொடுங்குற்றவாளிகளை விடுவிக்க பிரயத்தனம் செய்யும் பா.ஜ.க. ஆட்சியாளர்கள், எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களில் நீண்டகால சிறைவாசிகளை - நன்னடத்தையின் அடிப்படையிலும் வயது மூப்பு கருதியும் சட்டபூர்வமாக முன்விடுதலை செய்யும் முயற்சிகளுக்கு முட்டுக்கட்டை போடுவது அவர்களது இரட்டை நிலைப்பாட்டையே காட்டுகிறது. “நீதி கிடைத்தது கண்டு கண்ணீர் மல்கினேன்; என் குழந்தைகளைக் கட்டி அணைத்துக் கொண்டேன்; ஒரு பெரிய மலையையே என் மேல் இருந்து அகற்றியது போன்ற உணர்வை பெறுகிறேன். இப்போதுதான் நிம்மதிப் பெருமூச்சு விடுகிறேன்” என்று சகோதரி பில்கிஸ் பானு அவர்கள் கூறியுள்ள வார்த்தைகள் அவர் பட்ட இன்னல்களை விவரிக்கின்றன.


நீதி கேட்டு அவர் நடத்திய நெடும்பயணத்துக்குக் கிடைத்துள்ள வெற்றி, பாதிக்கப்படும் ஒவ்வொரு பெண்ணுக்கும் ஊக்கத்தையும் போராடும் மன உறுதியையும் தருவதாகும். அஞ்சாமலும் சலிப்பின்றியும் அவர் நடத்திய போராட்டம் வரலாற்றில் நிலைத்து நிற்கும். அவருக்கும் அவருக்கு துணையாக நின்ற மூத்த வழக்கறிஞர்கள் உள்ளிட்ட ஜனநாயக சக்திகள் அனைவருக்கும் என் பாராட்டுகள்” என தெரிவித்துள்ளார். 


கடந்த 2002ஆம் ஆண்டு, குஜராத் கலவரத்தின்போது, கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டவர் பில்கிஸ் பானு. இவரை கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி, அவரது குடும்ப உறுப்பினர்களை கொடூரமாக கொலை செய்த வழக்கில் 11 குற்றவாளிகளின் தண்டனையை குஜராத் அரசு ரத்து செய்தது.  குஜராத் அரசின் இந்த உத்தரவை உச்சநீதிமன்றம் நேற்று அதாவது ஜனவரி 8ஆம் தேதி ரத்து செய்தது. மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணின் உரிமையைக் காப்பது மிகவும் முக்கியமானது என குறிப்பிட்டது. 


மேலும் உச்சநீதிமன்றம், “தண்டனை என்பது ஒருபோதும் பழிவாங்கலுக்கானது அல்ல, சீர்திருத்தத்திற்கானது. குற்றவாளியை சீர்திருத்துவதற்கான கோட்பாடுதான் தண்டனை. ஒரு குற்றவாளிக்கு வழங்கப்பட்ட தண்டனையின் நோக்கம் பூர்த்தி அடைந்து அவர் தனது தவறினை உணர்ந்து தன்னை மாற்றிக்கொண்டால் அவரை விடுவிக்கவேண்டும் என்பதுதான் சீர்திருத்தக் கோட்பாட்டின் இதயம்” எனக் கூறியது. மேலும்பாதிக்கப்பட்டவரின் உரிமைகளும் முக்கியமானது. ஒரு பெண் எப்போதும் மரியாதைக்கு தகுதியானவர். பெண்களுக்கு எதிரான கொடூரமான குற்றங்களை மன்னிப்பதை அனுமதிக்க முடியுமா? இவைதான் எழும் பிரச்சினைகள். "ஜார்ஜ் பெர்னார்ட் ஷாவை மேற்கோள் காட்டி நீதிபதி கிருஷ்ண ஐயர், குற்றச் செயல்களில் ஈடுபடுவதில் இருந்து ஆண்கள் வெளிவரவே இல்லை" என்று நீதிபதி நாகரத்னா கூறியதாக கூறினார்.