தமிழ்நாட்டின் புகழ்பெற்ற ஆன்மீகவாதியான மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் உடல்நலக்குறைவால் இன்று  அதாவது அக்டோபர் 19ஆம் தேதி காலமானார்.  இவருக்கு வயது 82. 


இது தொடர்பாக முதலமைச்சர் தனது இரங்கல் குறிப்பில், “மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பீடத்தின் நிறுவனர் பங்காரு அடிகளார் மறைவெய்தினார் என்ற செய்தியறிந்து மிகவும் வருந்தினேன்.


ஆதிபராசக்தி பீடத்தை நிறுவி, அரை நூற்றாண்டிற்கும் மேலாக மிகச்சிறப்பாக நடத்தி, கல்வி, மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு சமூக சேவைகளையும் மக்களுக்கு வழங்கி வந்தார்.


அம்மா என்று பக்தர்களால் அழைக்கப்பட்ட பங்காரு அடிகளார் , மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆலயத்தில் பெண்களே கருவறைக்குள் சென்று வழிபாடுகள் நடத்தும் புரட்சிகரமான வழக்கப்படுத்தினார். நடைமுறைகளை


கோயில் கருவறைக்குள் அனைத்துச் சாதியினரும் சென்று அர்ச்சனை செய்ய வேண்டும் என்பதற்காக தி.மு.கழகம் பல ஆண்டுகளாகப் போராடி, அதனை நடைமுறைப் படுத்தியும் வரும் நிலையில், அனைத்துப் பெண்களையும் கருவறைக்குள் சென்று அவர்களே பூசை செய்து வழிபடச் செய்த பங்காரு அடிகளாரின் ஆன்மீகப் புரட்சி, மிகவும் மதித்துப் போற்றத் தக்கது.


அவரது ஆன்மீக மற்றும் சமூக சேவைகளைப் பாராட்டி கடந்த 2019 ஆம் ஆண்டு ஒன்றிய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கிப் பெருமைப் படுத்தியது.


அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு 


கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் "நம்மைக் காக்கும் 48" திட்டத்தைத் தொடங்கி வைப்பதற்காக மேல்மருவத்தூர் சென்றிருந்த போது, உடல்நலிவுற்றிருந்த பங்காரு அடிகளாரை நேரில் சென்று பார்த்து நலம் விசாரித்து வந்தேன்.


உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வந்த அடிகளார் தற்போது மறைவுற்றிருப்பது, அவரது பக்தர்களுக்கு ஒரு பேரிழப்பாகும். பங்காரு அடிகளாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், பக்தர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். 


பங்காரு அடிகளாரின் சேவைகளைப் போற்றும் வகையில், அரசு மரியாதையுடன் அவரது இறுதி நிகழ்வு நடைபெறும்” என குறிப்பிட்டுள்ளார். 


தமிழ்நாட்டில் உள்ள மிகவும் பிரசித்தி பெற்ற கோவில்களில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலும் ஒன்று. இந்த கோவிலில்  தலைமை ஆன்மீகவாதியாக இருந்தவர் பங்காரு அடிகளார். பக்தர்களும் இவரை பின்பற்றுபவர்களும் அன்புடன் ’அம்மா’ என்றே அழைத்து வந்தனர். இந்த கோவிலுக்கு வருபவர்கள் கட்டாயம் இவரிடம் ஆசி பெற்றுச் செல்வார்கள். ஆதிபராசக்தி கோவிலுக்கு தமிழ்நாடு மட்டும் இல்லாது அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடக மற்றும் ஆந்திராவில் இருந்தும் பகதர்கள் பரவலாக வருவார்கள். இந்த கோவிலுக்கு பொதுவாகவே பெண் பக்தர்கள் அதிகம்.


இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்பட்டதில், இங்கு வந்து வழிபட்டால் இன்னல்கள் நீங்கி, நன்மைகள் நடக்கும் என்பது பகதர்களின் நம்பிக்கையாக உள்ளது. அதேபோல், பெண்கள் கோவிலின் கருவறைக்குள் சென்று வழிபடலாம். மேலும், ஐய்யப்பன் கோவிலுக்கு ஆண்கள் இருமுடி கட்டிக்கொண்டு செல்வதைப் போல், மேல் மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலுக்கு பெண்கள் இருமுடி கட்டி தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றி வந்ததனர். இதற்கெல்லாம் வழிவகுத்தவர் மறைந்த பங்காரு அடிகளார் ஆவார்.