அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் மீது வரிசையாக வருமானவரித்துறை, லஞ்ச ஒழிப்புத்துறை ஆகியவை சோதனை நடத்தி வருகின்றனர். அந்தவகையில் தற்போது மீண்டும் முன்னாள் அமைச்சர்கள் சி.விஜய்பாஸ்கர் மற்றும் வேலுமணி ஆகியோர் வீடுகளில் இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வருகின்றது.


 






கோவையில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் எஸ்.பி.வேலுமணி தொடர்பாக தொண்டமுத்தூர், வடவள்ளி உள்ளிட்ட 5 இடங்களிலும் சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. அதேபோல் புதுக்கோட்டையிலுள்ள முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் இல்லத்திலும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இவர்கள் இருவர் மீது முறைகேடு புகார் பதியப்பட்டு அந்தப் புகார் தொடர்பாக சோதனை நடத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 


விஜயபாஸ்கர் மீது உள்ள புகார்:


அதிமுக ஆட்சியில் சி.விஜயபாஸ்கர் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தார். அப்போது தன்னுடைய பதவி காலத்தில் திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டையில் அமைந்துள்ள வேல்ஸ் மருத்துவ கல்லூரிக்கு சான்றிதழ் ஒன்றை அளித்துள்ளார். அதாவது அந்த மருத்துவமனை புதிய மருத்துவ கல்லூரி தொடங்க தகுதியான ஒன்று என்று Essentiality Certificate வழங்கியுள்ளார். இந்த சான்றிதழை வாங்கும் போது அந்த மருத்துவமனை 300 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் இரண்டு வருடங்களாக செயல்பட்டு வந்துள்ளது. இந்த அனுமதி சான்றிதழ் வழங்கியதில் ஊழல் நடைபெற்றுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை புகாரை பதிவு செய்துள்ளது. மேலும் இந்தப் புகார் தொடர்பாக ஆவணங்களை கைப்பற்ற சென்னையில் 5 இடங்களிலும், சேலத்தில் 3 இடங்களிலும் , மதுரை, தேனி, புதுக்கோட்டை, திருவள்ளூர் மற்றும் தாம்பரம் ஆகியவற்றில் ஒரு இடத்திலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. மொத்தமாக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கருக்கு சொந்தமான 13 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.


வேலுமணி மீது உள்ள புகார்:


அதிமுக ஆட்சியில் உள்ளாட்சித்துறை அமைச்சராக எஸ்.பி.வேலுமணி பணியாற்றி வந்தார். அப்போது தெரு விளக்குகள் அனைத்தையும் எல்.இ.டி பல்புகளாக மாற்றும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. அதற்காக சேலம், தர்மபுரி,திருச்சி, நாகபட்டினம், கன்னியாகுமரி ஆகிய 5 மாவட்டங்களில் எல்.இ.டி பல்புகள் வாங்கிய டெண்டரில் சுமார் 500 கோடி ரூபாய் அளவிற்கு முறைகேடு நடைபெற்றுள்ளதாக புகார் வந்துள்ளது. அதன்படி இந்த 5 மாவட்டங்களில் சந்தை விலையைவிட மிகவும் அதிகமான விலைக்கு எல்.இ.டி பல்புகள் வாங்கப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. இது தொடர்பாக நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில் சுமார் 74 கோடியே 58 ஆயிரத்து 700 ரூபாய் அரசுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக ஆவணங்களை கைப்பற்ற சென்னையில் 10 இடங்களிலும், கோவையில் 9 இடங்களிலும், திருச்சி, செங்கல்பட்டு, தாம்பரம் மற்றும் ஆவடி உள்ளிட்ட 26 இடங்களிலும் சோதனை நடத்தி வருகிறது.