இன்று கட்சிக்கு களங்கம் விளைவித்ததாக கூறி காயத்ரி ரகுராம் மற்றும் சூர்யா சிவா மீது அண்ணாமலை கடும் நடவடிக்கை எடுத்துள்ளது பாஜகவினரிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. 


அடுத்தது யார்?


தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சிறுபான்மையினர் அணி தலைவர் டெய்சி சரணுக்கும் OBC அணியின் மாநில பொது செயலாளர் சூர்யா சிவாவிற்கும் இடையே நடந்த தொலைபேசி உரையாடல் வெளியானது. இந்த உரையாடலானது கடந்த சில தினங்களுக்கு முன்பே நடைபெற்றதாக கூறப்படுகிறது. 


பெரும் சர்ச்சைக்குள்ளாகவும், ஆபாசமாகவும் பேசியுள்ள இந்த ஆடியோ குறித்து, கட்சித் தலைமை இவர்கள் இருவரையும் அழைத்து பேசியதாக கூறப்படுகிறது. இவர்கள் இருவரையும் அழைத்து சமாதானம் பேசிய பிறகு, தற்போது ஆடியோ வெளியாகியுள்ள சம்பவம் கட்சித் தலைமை மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 


இதையடுத்து யார் இந்த ஆடியோவை கட்சியின் கட்டுப்பாட்டை மீறி வெளியிட்டது? என்று கட்சியினருடையே பெரும் கேள்வி எழுந்துள்ளது. டெய்சி தரப்பினர் சார்பில் யாரேனும் வெளியிட்டனரா என்றும் கேள்விகள் எழுந்து வருகிறது. இதையடுத்து டெய்சி மீதும் நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.


என்ன நடக்கிறது பாஜகவில்?


தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சிறுபான்மையினர் அணி தலைவர் டெய்சி சரண் அவர்களுக்கும் OBC அணியின் மாநில பொது செயலாளர் சூர்யா சிவாவிற்கும் இடையே நடந்த தொலைபேசி உரையாடல் காரணமாக சூர்யா சிவா கட்சி நிகழ்வுகளில் பங்கேற்க வேண்டாம் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.


இது தொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சிறுபான்மையினர் அணி தலைவர் டெய்சி சரணுக்கும் OBC அணியின் மாநில பொது செயலாளர் சூர்யா சிவாவிற்கும் இடையே நடந்த தொலைபேசி உரையாடல் ஒன்று இன்று காலை என் கவனத்திற்கு வந்தது.


இந்த சம்பத்தை விசாரித்து கட்சி தலைமைக்கு அடுத்த 7 நாட்களுள் அறிக்கை சமர்ப்பிக்கவேண்டும் என்று தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில துணைத் தலைவரும் ஒழுங்கு நடவடிக்கை குழுவின் தலைவருமான கனகசபாபதியிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஒழுங்கு நடவடிக்கை குழு தனது அறிக்கையை சமர்ப்பிக்கும் வரை OBC அணியின் மாநில பொது செயலாளர் சூர்யா சிவா கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டாம் என்று அறிவுறுத்துகிறோம்" என அண்ணாமலை தெரிவித்துள்ளார். 


கட்சிக்கு களங்கம் விளைவித்து வந்ததால் பா.ஜ.க.வில் இருந்து நடிகை காயத்ரி ரகுராமை 6 மாத காலம் சஸ்பெண்ட் செய்து  அண்ணாமலை உத்தரவிட்டுள்ளார்.


மேலும், கட்சியின் அதிகாரப்பூர்வ செய்தியாளர்கள் தவிர இதர நிர்வாகிகள் யாரும், கட்சியின் அனுமதியின்றி யாரும் நேர்காணல் அளிக்க கூடாது என  அண்ணாமலை அறிக்கை வெளியிட்டுள்ளார்.