கட்சிக்கு களங்கம் விளைவித்து வந்ததால் பா.ஜ.க.வில் இருந்து நடிகை காயத்ரி ரகுராமை 6 மாத காலம் சஸ்பெண்ட் செய்து  அண்ணாமலை உத்தரவிட்டுள்ளார்.


காயத்ரி ரகுராம், கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செய்லபடுவதாக கூறி, கட்சி தலைமைக்கு பலர் கடிதங்கள் அனுப்பியதாக கூறப்படுகிறது. இந்நிலையில்ல், இது தொடர்பாக விளக்கமளிக்குமாறு காயத்ரி ரகுராமுக்கு கட்சி தலைமை கடிதம் அனுப்பியதாகவும், ஆனால் இதுகுறித்து எந்த விளக்கமளிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. 


6 மாதம் நீக்கம்:


இந்நிலையில் இது தொடர்பாக பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், 


தமிழக பாரதிய ஜனதா கட்சியின் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநில தலைவர் காயத்ரி ரகுராம் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருவதால், கட்சியில் அவர் வகித்து வரும் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் ஆறு மாத காலத்திற்கு நீக்கப்படுகிறார்.


ஆகவே கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அவர்களிடம் கட்சி சார்பாக எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது என அண்ணாமலை அறிக்கை வெளியிட்டுள்ளார்.


”யாரும் என்னை தடுக்க முடியாது”






இந்நிலையில் அண்ணாமலை அறிக்கைக்கு காயத்ரி ரகுராம் பதலளித்து ட்வீட் செய்துள்ளார்.  அதில் குறிப்பிட்டுள்ளதாவது, பதவி நீக்கத்தை ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் என்னை நேசிக்கிறவர்கள் என்னுடன் பேசுவார்கள். இதை யாராலும் தடுக்க முடியாது. நான் இடைநீக்கத்துடன் தேசத்திற்காக பணியாற்றுவேன் என தெரிவித்துள்ளார். 


சூர்யா சிவாவுக்கு கட்டுப்பாடு:


இந்நிலையில், தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சிறுபான்மையினர் அணி தலைவர் டெய்சி சரண் அவர்களுக்கும் OBC அணியின் மாநில பொது செயலாளர் சூர்யா சிவாவிற்கும் இடையே நடந்த தொலைபேசி உரையாடல் காரணமாக சூர்யா சிவா கட்சி நிகழ்வுகளில் பங்கேற்க வேண்டாம் என அண்ணாமலை அறிக்கை வெளியிட்டுள்ளார்.


மேலும் அதில் குறிப்பிட்டுள்ளதாவது,


தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சிறுபான்மையினர் அணி தலைவர் டெய்சி சரணுக்கும் OBC அணியின் மாநில பொது செயலாளர் சூர்யா சிவாவிற்கும் இடையே நடந்த தொலைபேசி உரையாடல் ஒன்று இன்று காலை என் கவனத்திற்கு வந்தது.


இந்த சம்பத்தை விசாரித்து கட்சி தலைமைக்கு அடுத்த 7 நாட்களுள் அறிக்கை சமர்ப்பிக்கவேண்டும் என்று தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில துணைத் தலைவரும் ஒழுங்கு நடவடிக்கை குழுவின் தலைவருமான கனகசபாபதியிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஒழுங்கு நடவடிக்கை குழு தனது அறிக்கையை சமர்ப்பிக்கும் வரை OBC அணியின் மாநில பொது செயலாளர் சூர்யா சிவா கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டாம் என்று அறிவுறுத்துகிறோம்" என அண்ணாமலை தெரிவித்துள்ளார். 


இந்நிலையில், ஒரே நாளில் காயத்ரி ரகுராம் மற்றும் சூர்யா சிவாவின் மீதான கட்டுப்பாடு விதித்துள்ளது, பாஜகவினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.