CM Stalin: அண்ணா பிறந்தநாளையொட்டி 127 போலீசாருக்கு அண்ணா பதக்கங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருக்கிறார்.


 127 போலீசாருக்கு அண்ணா பதக்கங்கள்:


இதுகுறித்து வெளியான அறிக்கையில், "தமிழ்நாட்டில் காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை சிறைத்துறை, ஊர்க்காவல் படை, விரல்ரேகைப் பிரிவு மற்றும் தடய அறிவியல் துறைகளில் சிறப்பாக பணியாற்றிய அலுவலர்கள் மற்றும் பணியாளர்களை அங்கீகரிக்கும் வகையிலும், பணியில் ஈடுபாடு மற்றும் அர்ப்பணிப்புடன் பணிபுரிந்ததை பாராட்டும் வகையிலும், ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 15-ம் நாள் பேரறிஞர் அண்ணா பிறந்த நாளன்று தமிழக முதலமைச்சரின் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.


இந்த ஆண்டு காவல் துறையில் தலைமைக் காவலர் முதல் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் வரையிலான பணியாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கும், 100 தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறையில் தீயணைப்பு வீரர் முதல் மாவட்ட அலுவலர் வரையிலான 8 பணியாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கும், சிறைத்துறையில் முதல்நிலை சிறைக்காவலர் முதல் சிறை கண்காணிப்பாளர் வரையிலான பணியாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கும், ஊர்க்காவல் படையில் 10 ஊர்க்காவல் படைவீரர் முதல் படைதளபதி வரையிலான 4 ஊர்க்காவல் படை அலுவலர்களுக்கும், விரல்ரேகைப் பிரிவில் 2 கூடுதல் காவல் கண்காணிப்பாளர்களுக்கும் மற்றும் தடய அறிவியல் துறை பிரிவில் 2 அலுவலர்கள் துணை இயக்குநர் மற்றும் அறிவியல் அலுவலர் ஆகியோருக்கும் மெச்சத்தகுந்த பணியினை அங்கீகரிக்கும் வகையில் அண்ணா பதக்கங்கள் வழங்கிட தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். 


மேலும், சாயல்குடி காவல் சரக எல்லைக்குட்பட்ட பகுதியில், கூட்டுப் பலாத்காரம் மற்றும் கொள்ளை குற்றத்தில் சம்பந்தப்பட்ட இரண்டு தலைமறைவான குற்றவாளிகளை 25.03.2022 அன்று கைது செய்யும் பணியில் ஈடுபட்டப் போது  உதவி ஆய்வாளர் நவநீத கிருஷ்ணன், தீவிர குற்றத்தடுப்பு பிரிவு, ராமநாதபுரம் மாவட்டம், எதிரிகளால் கடுமையாக தாக்கப்பட்டு இடது தொடையில் பலத்த வெட்டுக் காயம் அடைந்த போதும், சற்றும் தளர்வில்லாமல் தனது தைரியச் செயலினால் இரண்டு எதிரிகளையும் கைது செய்ய உதவியாக இருந்துள்ளார்.


இந்த தாக்குதலில் தலைமைக் காவலர் கருப்பசாமி என்பவரின் உயிரை காப்பாற்ற மிகவும் உதவியாக இருந்துள்ளார். , உதவி ஆய்வாளர் கே.நவநீத கிருஷ்ணனின் துணிச்சலையும் செயலையும் பாராட்டி அவருக்கு காவல் துறையின் வீரதீர செயலுக்கான அண்ணா பதக்கம் வழங்கிட தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 


அண்ணா பிறந்தநாள்:


வரலாற்று பெருமை வாய்ந்த காஞ்சிபுரம் மண்ணில் பிறந்து தனது அடுக்கு மொழி பேச்சாற்றலாலும், அறிவாற்றலாலும், எழுத்தாற்றலாலும் தமிழக மக்களை கவர்ந்த மாபெரும் அரசியல் தலைவர் பேரறிஞர் அண்ணாவின் 115வது பிறந்நாள் செப்டம்பர் 15ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்நாளில், இவர் பிறந்த காஞ்சிபுரத்தில் காலை 10 மணியளவில் திமுக தேர்தல் அறிக்கையில் அறிவித்தபடி, மகளிர்களுக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் உதவித்தொகை வழங்கிடும் கலைஞர் உரிமைத் தொகை திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.




மேலும் படிக்க 


Minister Sekarbabu: “உப்பு சப்பு இல்லாத சனாதனம்; அண்ணாமலை தூக்கி பிடிக்க காரணம் இதுதான்” - சேகர் பாபு தாக்கு