மதுரை தோப்பூரில் கிடப்பில் போடப்பட்டிருந்த எய்ம்ஸ் மருத்துமனைக்கான கட்டுமானத்தின் முதற்கட்ட பணிகள் தொடங்கியுள்ளது. 


எய்ம்ஸ் (AIIMS) எனப்படும் அனைத்து இந்திய மருத்துவ அறிவியல் கழகம் டெல்லியில் இருப்பது போல அனைத்து மாநிலங்களிலும் அமைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்தது. அதன்படி தமிழ்நாட்டில் மதுரை மாவட்டம் தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்ட்டது. 222 ஏக்கரில் மருத்துவமனைக்கான 2018 ஆம் ஆண்டு மத்திய அரசு ஒப்புதல் அளித்த நிலையில்,2019 ஆம் ஆண்டு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.


நாட்டில் திட்டமிடப்பட்ட பிற எய்ம்ஸ் மருத்துவமனைகளுக்கு மத்திய அரசு தனது பட்ஜெட்டில் நேரடியாக நிதி ஒதுக்கியது. ஆனால் மதுரை மருத்துவமனைக்கான கட்டுமான பணிகளுக்கு ஜப்பான் நாட்டின் ஜைக்கா நிறுவனத்துடன் கடன் பெற இந்தியா போட்ட ஒப்பந்தம் 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதம் கையெழுத்தானது. இந்த மருத்துவமனை கட்டுவதற்கு ரூ.1977 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் 82 சதவிகித தொகையான ரூ.1627 கோடி ஜைக்கா நிறுவனம் கடனாக வழங்கும் என கூறப்பட்டது.


ஆனால் அந்நிறுவனம் இதுவரை கடன் வழங்கவில்லை. கொரோனா பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் 5 ஆண்டுகளாக மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான கட்டுமான பணிகள் எதுவும் தொடங்கப்படாமல் இருந்தது. மதுரையுடன் அறிவித்த பிற எய்ம்ஸ் மருத்துவமனைகள் எல்லாம் கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்பட்டு விட்டது. இதனை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்தது. 


அதேசமயம் கடந்த 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 17 ஆம் தேதி மருத்துவமனை கட்டுமானம் தொடர்பாக டெண்டர் அறிவிப்பு வெளியானது. இதனைத் தொடர்ந்து கடந்த ஜனவரி மாதம் எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி மாணவர்களுக்கு வேண்டிய வசதுஇகள் தொடர்பான அறிவிப்பு வெளியானது. மேலும் கட்டுமான டெண்டர் இறுதி செய்யப்பட்டு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. 


எல் அண்ட் டி நிறுவனம் டெண்டரை கைப்பற்றியுள்ள நிலையில் சமீபத்தில் வாஸ்து பூஜை மற்றும் நிலத்தை சமன்படுத்தும் வேலை எல்லாம் நடைபெற்றது. இந்நிலையில் மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான முதற்கட்ட பணிகள் தொடங்கியுள்ளது. ஏற்கனவே ரூ.10 கோடி மதிப்பீட்டில் 5 கி.மீ., தூரத்துக்கு 12 அடி உயர சுற்றுச்சுவரும், 6 கிலோ மீட்டருக்கு சாலை பணிகள் நிறைவடைந்துள்ளது. இதனைத் தொடர்ந்து 10 தளங்களில் 870 படுக்கை வசதிகளுடன் கூடிய எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் திடீரென தொடங்கியுள்ளதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.