அதிமுக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி மாரடைப்பால் இன்று காலமானார். கடந்த 10 நாட்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த அவர், சென்னை பெருங்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலை 6.45 மணிக்கு அவர் மரணமடைந்தார். அவருக்கு வயது 66.




 


ஓபிஎஸ் மனைவியின் மரணத்தால் அதிமுகவினர் அதிர்ச்சியில் உள்ளனர். மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு  எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி, அதிமுக உறுப்பினர்கள் அஞ்சலி செலுத்தினார்கள்.  பிற கட்சித் தலைவர்கள் அஞ்சலி செலுத்த சென்றுக்கொண்டிருக்கின்றனர். இன்று மதியம் அவரது உடல் சொந்த ஊரான தேனி மாவட்டம் பெரியகுளத்திற்கு கொண்டு செல்லப்படும் என்று கூறப்படுகிறது.




விஜயலட்சுமி, ஓபிஎஸ் மூன்று முறை முதலமைச்சராக இருந்தபோதும், துணை முதலமைச்சராக இருந்தபோதும் அவருக்கு உறுதுணையாக இருந்தார். ஓபிஎஸ் பல்வேறு கட்ட பிரச்னைகளை சந்தித்தபோதும் அவருக்கு பக்கபலமாக இருந்தார். கடந்த மே மாதம் ஓபிஎஸ்-ன் சகோதரர் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இந்த நிலையில், மனைவியை இழந்து மருத்துவமனையில் கண்ணீருடன் இருக்கும் ஓபிஎஸ்-க்கு பலரும் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.