திருவண்ணாமலை மாவட்டத்தில் வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் நடைபெற உள்ளதால், விவசாயிகள் அதில் பங்கு பெற வேண்டும் என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம்
தமிழ்நாடு அரசு, விவசாய உற்பத்தியை அதிகரிக்கவும், விவசாயிகள் நலனை உறுதி செய்யவும், வேளாண்மை மற்றும் சகோதரத் துறைகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்தவும் பல்வேறு திட்டங்களை எடுத்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக, 2025 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 27 மற்றும் 28 ஆம் தேதிகளில், திருவண்ணாமலை மாவட்டம், திருக்கோயிலூர் சாலையில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு எதிரில் அமைந்துள்ள தனியார் மைதானத்தில் வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் நடைபெற உள்ளது.
இந்த நிகழ்ச்சியை தமிழ்நாடு முதலமைச்சர் டிசம்பர் 27, 2025 அன்று திறந்து வைக்க உள்ளார். எனவே காஞ்சிபுரம் மாவட்ட விவசாயிகள் அனைவரும் இதில் கலந்துகொண்டு பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் கலைச்செல்வி மோகன், தெரிவித்துள்ளார்கள்.
ஆன்லைனில் விண்ணப்பம்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள முன்னனி ஏற்றுமதியாளர்கள், சிறப்பாக செயல்படும் உழவர் உற்பத்தி நிறுவனங்கள், உணவு பதப்படுத்துபவர்கள் ஆகியோர் தங்களது தயாரிப்புகள் மற்றும் சேவைகளை கண்காட்சி கூடங்களில் காண்பிக்க விரும்பினால், https://www.tnagrisnet.tn.gov.in/agriExpo/ என்ற இணையதள முகவரியில் பதிவு செய்ய கேட்டுக்கொள்ளபடுகிறார்கள்.
மேற்கண்ட இணையதளத்தில் கண்காட்சி கூடங்கள் அமைப்பதற்கு பதிவு மேற்கொள்ள 22.12.2025 கடைசி நாள் ஆகும். மேலும் விவசாயிகள் தங்களது வட்டார வேளாண்மை உதவி இயக்குநர்களை தொடர்பு கொண்டு விவசாய கண்காட்சியில் கலந்துக்கொண்டு பயனடைந்திடுமாறு இதன் மூலம் கேட்டுக்கொள்ளப்படுகிறது.