ஆதித்யா எல் -1 


நிலவின் தென் துருவத்திற்கு அருகே விண்கலம் ஒன்றை வெற்றிகரமாகத் தரையிறக்கிய முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. இந்த வெற்றியை தொடர்ந்து பூமிக்கு மிக அருகில் உள்ள நட்சத்திரமான சூரியனைக் கண்காணிக்கவும், சூரியக் காற்று (solar wind) போன்ற விண்வெளி வானிலை அம்சங்களை ஆய்வு செய்யவும் திட்டமிட்டது. அதன்படி சூரியனை நோக்கிச் செல்லும் முதல் விண்வெளி ஆய்வகத்தை இந்தியா தொடங்கியுள்ளது. சூரியனை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ விஞ்ஞானிகளால்  நாளை (செப்டம்பர் 2-ம் தேதி)  ஸ்ரீஹரிகோட்டோவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஏவு தளத்தில் இருந்து ஆதித்யா எல் -1 என்ற செயற்கைக்கோள் விண்ணிற்கு அனுப்பப்பட உள்ளது. அதற்கான கவுண்டவுன் தற்போது தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா விண்கலத்தை அனுப்பும் முயற்சியில் விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.


தமிழக பெண் விஞ்ஞானி


இந்த நிலையில் ஆதித்யா எல் - 1 செயற்கைக்கோளின் திட்ட இயக்குனராக தமிழகத்தை சேர்ந்த ஒரு பெண்மணி ஒருவர் பணியாற்றியுள்ளார்.. இவர் தற்போது ஆதித்யா எல்-1 திட்ட இயக்குனராக செயல்பட்டு வருகிறார். 


யார் இந்த நிகர்ஷாஜி?


தென்காசி மாவட்டம், செங்கோட்டை பகுதியை சேர்ந்த சேக் மீரான்-சைத்தூன் பீவி தம்பதியினரின் 2-வது மகள் நிகர்சுல்தான் ஆவார். இவரது தற்போதைய பெயர் -நிகர்ஷாஜி. இவர் செங்கோட்டை எஸ்.ஆர்.எம். அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 1978-79-ஆம் கல்வியாண்டில் 10-ம் வகுப்பு பயின்று 433 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதல் மாணவியாக திகழ்ந்துள்ளார். அதேபோல், 12-ம் வகுப்பில் 1980-81 ஆம் கல்வியாண்டில் 1008 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதல் மாணவியாக திகழ்ந்துள்ளார். அதன்பின் நெல்லை அரசு பொறியியல் கல்லூரியில் தனது பொறியியல் படிப்பை முடித்த நிகர்ஷாஜி 1987- ஆம் ஆண்டு இஸ்ரோவில் பணியில் சேர்ந்துள்ளார். தற்போது, பணியில் சேர்ந்து 36 ஆண்டுகள் ஆகியுள்ள சூழலில், ஆதித்யா எல்-1 திட்டத்திற்கு இஸ்ரோ நிர்வாகத்தால் திட்ட இயக்குனராக அறிவிக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.




நிகர்ஷாஜியின் சகோதரர் சேக்சலீம் என்பவர் ஐ.ஐ.எம்.மில் விஞ்ஞானியாகவும், தொடர்ந்து தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி பரமகல்யாணி கல்லூரியில் பேராசிரியராகவும், தொடர்ந்து துறை தலைவராகவும் பணியாற்றியவர். அதேபோல், நிகர்ஷாஜியின் தங்கை ஆஷா என்பவர் கேரளாவில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். நிகர்ஷாஜியின் கணவர் ஷாஜகான் துபாயில் பொறியாளராக பணியாற்றி வரும் நிலையில், அவரது மகன் முகமது தாரிக் நெதர்லாந்து நாட்டில் விஞ்ஞானியாக பணியாற்றி வருகிறார். மகள் தஸ்நீம் மங்களூரில் எம்.எஸ் மருத்துவம் பயின்று வரும் நிலையில், தற்போது நிகர்ஷாஜி தனது குடும்பத்துடன் பெங்களூருவில் வசித்து வருகிறார்.


சகோதரர் பெருமிதம்


இது தொடர்பாக, நிகர்ஷாஜியின் அண்ணன் பேராசிரியராகிய ஷேக்சலீம் என்பவர் கூறும்போது, "இன்று எனக்கு மிகப்பெருமையான நாள். எனது தங்கை நிகர்ஷாஜி இஸ்ரோவில் கடந்த 36 ஆண்டுகளாக  சிறந்த விஞ்ஞானியாக பணியாற்றி வருகிறார். ஆதித்யா எல் - 1 திட்ட இயக்குனராக பணியாற்றி வருவது எனக்கும், எனது குடும்பத்திற்கும் நான் வாழும் செங்கோட்டை நகரத்திற்கும் மிகவும் பெருமையான தருணம். நாளை விண்ணில் ஏவப்படும் ஆதித்யா எல் 1 வெற்றி பெற எனது வாழ்த்துக்கள்.  இது நமது நாட்டின் ஒட்டுமொத்த உழைப்பு” எனத் தெரிவித்தார்..




பயின்ற பள்ளிக்கு பெருமை சேர்த்த நிகர்ஷாஜி


அதேபோல், அவர் பயின்ற பள்ளியின் தலைமை ஆசிரியர் தெரிவிக்கும்போது, ”தமிழகத்தில் உள்ள ஒரு கிராமத்தில் பயின்ற பள்ளி மாணவி இன்று உலகமே போற்றும் வகையில் ஒரு செயற்கைக்கோளுக்கு திட்ட இயக்குனராக பணியாற்றி வருவது இந்த தருணத்தில் எனது பள்ளிக்கும், தமிழக பள்ளி கல்வித்துறைக்கும் பெருமை சேர்த்துள்ளது. பள்ளியில் முதலிடம் பிடித்து முதல் மாணவியாக திகழ்ந்தார். இவரது செயல் நாட்டிற்கும், வீட்டிற்கும், பள்ளிக்கும் பெருமை சேர்க்கும் விதமாக இருப்பதால் பெரும் மகிழ்ச்சியடைகிறோம்” என்றார்.