நடிகை ரோகிணி பற்றியும், நடிகர் ரகுவரன் பற்றியும் கிஷோர் கே.சாமி பேஸ்புக்கில் இழிவாக பதிவு செய்து பரப்பியதாகவும், ஆபாசமாக பேசியதாவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆபாசமாக பதிவிட்ட கிஷோர் கே.சாமி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நடிகை ரோகிணி ஆன்லைனில் புகார் அளித்துள்ளார். 


முன்னதாக தலைவர்களை அவதூறாகப் பேசிய வழக்கில் சோஷியல் மீடியா பிரபலம் கிஷோர் கே.சுவாமி 28 நாள் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பெண் பத்திரிகையாளர்களை அவதூறாகப் பேசியது, அண்ணல் அம்பேத்கரை ஆங்கிலேய அடிப்பொடி என்றது என கிஷோரின் ட்விட்டர் பக்கங்கள் அவதூறுகளால் அழுக்கேறியவை.கைது செய்து நீதிபதிகள் முன்பு ஆஜர்படுத்தப்பட்ட கிஷோரை வக்கிர புத்திகொண்டவர், பெண்கள் பற்றிய கிஷோரின் குரூரமான கருத்துகள் கேவலமான எண்ணம் கொண்டவை என விமர்சித்துள்ளது தாம்பரம் கிளை நீதிமன்றம். யூட்யூப் ட்விட்டர் எனச் சமூக வலைத்தளங்களில் அவதூறுகளில் ஈடுபடுபவர்களை அண்மைக் காலமாகவே கைது செய்து வருகிறது ஆளும் அரசு. அந்த வகையில்தான் சில நாட்களுக்கு முன்பு, ‘காரணமே இல்லையென்றாலும் என்னைக் கைது செய்யுங்கள்’ என ட்விட்டரில் முதல்வர் ஸ்டாலினுக்குச் சவால்விட்ட கிஷோர் ஸ்வாமி கைது செய்யப்பட்டார்.




முன்னதாக தன்னுடைய சோஷியல் மீடியா பதிவுகளால் அதிகம் விமர்சனத்துக்கு உள்ளானவர் கிஷோர்.  தருமபுரி திமுக நாடாளுமன்ற எம்பி செந்தில்குமாரை கடந்த ஜனவரி மாதம் கடுமையாக விமர்சனம் செய்து ட்விட்டரில் ஒரு பதிவை செய்திருந்தார். அந்தப் பதிவில் தருமபுரி எம்பியை தகாத வார்த்தைகளால் கிஷோர் கே சாமி திட்டியிருந்தார். இதற்கு தருமபுரி எம்பியும் நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன்  உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று பதிலளித்திருந்தார். அதேபோல நீட் தற்கொலை தொடர்பாக பதிவிட்டிருந்த கிஷோர், "சரளமாக ஆங்கிலத்திலோ தமிழிலோ ஒரு கடிதம் கூட எழுத வராது என்றாலும் படிக்குற எல்லோரும் டாக்டர் ஆயிடனும் , அப்புறம் யார் தான் பேஷண்ட் ???? எல்லாரும் பல்லக்குல ஏறிட்டா பல்லக்கை யார் தான் தூக்குறதாம் ??? குழந்தைகளை படுத்துவது நீட் அல்ல பெற்றோர்கள் தான்" எனப் பதிவிட்டிருந்தார். அவரின் இந்தப் பதிவு பெருமளவில் சர்ச்சையானது. 




அதேபோல், இந்திய கிரிக்கெட் அணியில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சேலத்தைச் சேர்ந்த நடராஜன் தேர்வாகி முதல் முறையாக களமிறங்கினார். அப்போது அவர் தன்னுடைய முதல் சர்வதேச விக்கெட்டை வீழ்த்தினார். இதற்கு அப்போதைய தமிழ்நாட்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உட்பட பலரும் வாழ்த்து தெரிவித்தனர். இந்த சமயத்திலும் கிஷோர் கே சாமி செய்த பதிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அப்போது அவர் கிரிக்கெட் வீரர் நடராஜனின் ஜாதி பெயரை குறிப்பிட்டு ஒரு ட்விட்டர் பதிவை செய்திருந்தார். இதை பலரும் கண்டித்து ட்விட்டரில் பதிவு செய்திருந்தனர்.


பாரதிய ஜனதாவா? திராவிட ஜனதாவா? கொந்தளிக்கும் பிராமணர் சங்கம்..!