தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக புதியதாக பொறுப்பேற்றுள்ள தி.மு.க. அரசு பல்வேறு புதிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆக்சிஜன் சிலிண்ர்டகள் பற்றாக்குறை, ரெம்டெசிவிர் மருந்துகள் தட்டுப்பாடு போன்றவற்றை சரி செய்யவும், கொரோனா தடுப்பு பணிகளை துரிதப்படுத்தவும் தொழிலதிபர்கள், திரைப்பிரபலங்கள், பொதுமக்கள் தங்களால் இயன்ற நிதிஉதவியை அளிக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார்.


அவரது வேண்டுகோளை ஏற்று பல தரப்பினரும் முதல்வர் பொது நிவாரண நிதிக்கு தங்களால் இயன்ற நிதியுதவியை அளித்து வருகின்றனர். இந்த சூழலில், தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன் இன்று தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்தார்.




முதல்-அமைச்சராக பொறுப்பு ஏற்றுக்கொண்ட அவருக்கு வாழ்த்து தெரிவித்ததுடன், கொரோனா தடுப்பு பணிகளுக்காக ரூபாய் 25 லட்சத்தை நிதியுதவியாக அவரிடமே வழங்கினார். இந்த சந்திப்பின்போது, நடிகரும், எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் உடனிருந்தார்.


சிவகார்த்திகேயகன் மட்டுமின்றி நடிகர் அஜித் முதல்வர் பொது நிவாரண நிதிக்கு ரூபாய் 25 லட்சமும், பெப்சி திரைப்பட தொழிலாளர்களுக்கு ரூபாய் 10 லட்சமும் வழங்கியுள்ளார். மேலும், நடிகர் ரஜினிகாந்தின் மகள் சவுந்தர்யா ரஜினிகாந்த் முதல்வர் நிவாரண நிதிக்கு ரூபாய் 1 கோடி வழங்கியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.