தமிழ் திரையுலகில் சுப்ரீ்ம் ஸ்டார் என்று ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் சரத்குமார். இவர் தற்போது பாஜக-வில் உள்ளார். 2007ம் ஆண்டு தொடங்கிய சமத்துவ மக்கள் கட்சியை கடந்த 2024ம் ஆண்டு பாஜக-வுடன் இணைத்தார். 

Continues below advertisement

பாஜக-வில் இருந்து விலகலா?

ஆனால், கடந்த 2 ஆண்டுகளாக அவருக்கு பாஜக-வில் உரிய முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. மேலும், வரும் சட்டமன்ற தேர்தலில் தனது ஆதரவாளர்கள் சிலருக்கு போட்டியிட வாய்ப்பு வழங்குமாறு சரத்குமார் பாஜக தலைமையை வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. அதற்கும் பாஜக தலைமை பிடிகொடுக்காமல் இருந்து வருகிறது. 

இதனால், மன உளைச்சலுக்கு ஆளான சரத்குமார் பாஜக-விலே தொடர்ந்து நீடிக்கலாமா? அல்லது விலகிவிடலாமா? என்று கடந்த சில நாட்களாகவே சிந்தித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த  சூழலில், இன்று சென்னை தி.நகரில் தனது ஆதரவாளர்களுடன் சரத்குமார் ஆலோசனை நடத்துகிறார். அகில இந்திய சரத்குமார் தலைமை ரசிகர் மன்ற நிர்வாகிகள், சுப்ரீம் ஸ்டார் பேரவை நிர்வாகிகள்,  உறுப்பினர்கள் அனைவரையும் இதற்காக சரத்குமார் அழைத்துள்ளார்.

Continues below advertisement

இன்று முக்கிய முடிவு:

இந்த கூட்டத்தில் தனது ஆதரவாளர்களின் முடிவைக் கேட்டு தனது அடுத்தகட்ட நகர்வை சரத்குமார் அறிவிக்க உள்ளார். திமுக-வில் தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கிய சரத்குமார் பின்னர் அதிமுக-வில் இணைந்தார். திமுக சார்பில் ராஜ்யசபா எம்பி-யாக பொறுப்பு வகித்த அவர் பின்னர் அதிமுக-வில் இணைந்தார். பின்னர், அதில் இருந்து விலகி சமத்துவ மக்கள் கட்சியைத் தொடங்கினார். 2011ம் ஆண்டு அதிமுக கூட்டணியில் இடம்பிடித்து வெற்றி பெற்றார். 

அதன்பின்னர், சரத்குமாரின் அரசியல் வாழ்க்கை பெரியளவில் பிரகாசிக்கவில்லை. அவர் தனது கட்சியை பாஜக-வுடன் இணைத்ததற்கு சமத்துவ மக்கள் கட்சி நிர்வாகிகள் பலரும் கண்டனம் தெரிவித்தனர். இந்த நிலையில், சரத்குமார் கட்சியில் தனக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கவில்லை என்று இன்று ஆதரவாளர்களுடன் ஆலோசிக்கிறார். தேர்தல் நெருங்கும் நேரத்தில் சரத்குமார் இதுபோன்று ஆலோசனை நடத்துவது பாஜக-விற்கு நெருக்கடியை உண்டாக்கியுள்ளது.

ராதிகா தோல்வி:

மக்களவைத் தேர்தலுக்கு முன்பு பாஜக-வில் இணைந்த சரத்குமாருக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், கட்சியில் இணைந்த சில மாதங்களில் அவரது மனைவி ராதிகாவிற்கு விருதுநகர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட பாஜக சார்பில் வழங்கப்பட்டது. ஆனால், அந்த தேர்தலில் அவர் படுதோல்வி அடைந்தார்.

சரத்குமாரை சமாதானப்படுத்த அவருக்கு கட்சியில் முக்கிய பதவியும், அவரது ஆதரவாளர்களுக்கு சட்டசபைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பும் பாஜக சார்பில் வழங்கப்படுமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.