கடந்த பத்தாண்டு கால ஆட்சியில் மாசு இல்லாத மதுரையாக இருந்தது. குறிப்பாக மதுரையில் உள்ள குப்பைகளை கொண்டு வெள்ளைகல்லில் உரமாக தயாரிக்கப்பட்டது. இதுபோன்று மாசு இல்லா மதுரையாக உருவாக்கினோம்.
புத்தக வெளியீட்டு விழா நிகழ்ச்சி
மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா தான் எழுதிய மதுரை வளர்ச்சியில் என் பயணம், நீங்களும் தெரிந்து கொள்ளலாம் என்ற நூல் அறிமுக விழா மதுரை எம்.ஆர்.சி.மகாலில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் வி.வி. ராஜன் செல்லப்பா, பட்டிமன்ற பேச்சாளர் ஞானசம்பந்தன், மேலூர் சட்டமன்ற உறுப்பினர் பெரியபுள்ளான் என்ற செல்வம், மாநில தகவல் தொழில் பிரிவு செயலாளர் வி.வி.ஆர். ராஜ் சத்யன் மற்றும் பல்வேறு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
வி.வி.ராஜன்செல்லப்பா செய்தியாளர் சந்திப்பு
அப்போது செய்தியாளர்கள் சந்தித்த வி.வி.ராஜன்செல்லப்பா பேசியதாவது....,” இந்த நூலை மதுரை தேர்தல் பரப்புரைக்கு வந்திருந்த எடப்பாடியார் வெளியிட்டார். இதனை தொடர்ந்து இந்த நூல் அறிமுகம் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் நான் செய்த பணிகளையும், மக்களுக்கு தேவையான கோரிக்கை பற்றி நூலாக வெளியிட்டு உள்ளேன். எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பல்வேறு கடிதங்களை நான் எழுதியுள்ளேன். அதற்காக உரிய பதிலை மத்திய அமைச்சர் எனக்கு அனுப்பினார். புரட்சித்தலைவரிடம் எனக்கு பிடித்தது பண்பும் அன்பும், புரட்சித்தலைவி அம்மாவிடம் எனக்கு பிடித்தது ஆளுமை. இரக்க குணம், திறமை, எடப்பாடியாரிடம் எனக்கு பிடித்தது அவரின் பண்பு, அன்பு, ஆளுமை, இரக்ககுணம், ராஜதந்திரம் இவை எல்லாம் எனக்கு பிடிக்கும். இன்றைக்கு தமிழகத்தில் நான்கு போட்டி என்று கூறுகிறார்கள். ஆனால் இன்றைக்கு தமிழகத்தில் அதிமுக தலைமையிலான கூட்டணிக்கும், திமுக தலைமையான கூட்டணிக்கும் தான் இருமுனை போட்டி.
திமுக காங்கிரஸுக்கு அடிபணிந்து விட்டது
அதிமுக யாருக்கும் அடிமை கிடையாது நாங்கள் எந்த உரிமையை விட்டுக் கொடுத்தோம் ? தமிழகத்தின் உரிமையை தான் பெற்று கொடுத்தோம். திமுகவிற்கு காரணம் கிடைக்கவில்லை என்பதற்காக இதுபோன்று பேசி வருகிறார்கள். தேசிய கட்சியோடு கூட்டணி தொகுதிப்பங்கீட்டை விரைந்து முடிக்க டெல்லி சென்றார். எடப்பாடியார் அதிமுகவின் கொள்கையை விட்டுக்கொடுக்கவே மாட்டார். காவிரி பிரச்சனையில் நாடாளுமன்றத்தை ஸ்தம்பிக்க வைத்து அதற்காக தீர்வு கண்டவர் எடப்பாடியார். திமுக போல ஒருபோதும் கொள்கைகளை நாங்கள் விட்டு கொடுத்தது கிடையாது. நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்க தாகூர் எழுப்பிய கேள்விக்கு இதுவரை திமுக பதில் சொல்லவில்லை. 28 தொகுதியை கொடுத்துவிட்டு இன்றைக்கு திமுக காங்கிரஸுக்கு அடிபணிந்து விட்டது. அதிமுக இன்றைக்கு சுதந்திரமாக இயங்குகிறது என்பதை ஸ்டாலின் புரிந்துகொள்ள வேண்டும். திமுக தொடர்ந்து 5 ஆண்டுகள் இருந்திருந்தால் அதற்கு அடுத்த முறை ஆட்சிக்கு வர முடியாது மீண்டும் ஆட்சிக்கு வந்ததாக சரித்திரம் இல்லை. அதே போன்று மீண்டும் திமுக ஆட்சிக்கு வராது. மதுரை மாவட்டத்திற்கு எண்ணற்ற திட்டங்களை எடப்பாடியார் செய்தார் குறிப்பாக எய்ம்ஸ் மருத்துவமனை, ஸ்மார்ட் சிட்டி திட்டங்கள், பறக்கும் பாலங்கள் உள்ளிட்டவை செய்தார். குறிப்பாக மக்களின் அடிப்படைத் தேவையான மதுரையில் உள்ள 13 மழை நீர் வடிகால் கால்வாயை சீரமைத்தோம் ஆனால் இன்றைக்கு அந்த வாய்க்காலெல்லாம் சீர்கெட்டு உள்ளது.
மதுரை தூத்துக்குடி தொழில் வடசாலை உருவாக்கப்படும்
கடந்த பத்தாண்டு கால ஆட்சியில் மாசு இல்லாத மதுரையாக இருந்தது. குறிப்பாக மதுரையில் உள்ள குப்பைகளை கொண்டு வெள்ளைகல்லில் உரமாக தயாரிக்கப்பட்டது. இதுபோன்று மாசு இல்லா மதுரையாக உருவாக்கினோம். இன்றைக்கு அந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இன்றைக்கு மதுரை மாசு படித்த மதுரையாக உள்ளது. மேலும் மதுரை மாநகராட்சியில் நடைபெற்ற ஊழலால் மதுரையின் அடையாளமாக ஊழல் என்று மாறிவிட்டது. இந்த ஊழல் தமிழகம் முழுவதும் நிச்சயம் எதிரொலிக்கும். மீண்டும் எடப்பாடியார் ஆட்சிக்கு வருவார் அப்பொழுது இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும், வண்ணம் தொழிற்சாலை உருவாக்கப்படும். அதேபோல மதுரை தூத்துக்குடி தொழில் வடசாலை உருவாக்கப்படும் என கூறினார்.
