தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், மதுரை மற்றும் தேனி ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


 மேலும் தமிழக கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில்  இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின்  மலை பகுதிகள் மற்றும்  நீலகிரி  மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  


30.09.2023 முதல் 04.10.2023 வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். 


சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான   வானிலை முன்னறிவிப்பு: 


அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை  பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.


சென்னையில் நேற்று நள்ளிரவு முதல் சூறைக்காற்றுடன் இடி மின்னல் குடிய கனமழை பெய்து வந்தது. கடந்த சில தினங்களாக காலையில் வெயிலும் மாலை அல்லது இரவு நேரங்களில் கனமழை பெய்து வருகிறது. வெப்பச் சலனம் காரணமாக மழை பெய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்கும் வரை வானிலை மாற்றங்கள் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  


மீனவர்களுக்கான எச்சரிக்கை:   


தமிழக கடலோரப்பகுதிகள்:


 30.09.2023 வரை: தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். 


வங்கக்கடல் பகுதிகள்: 


29.09.2023 மற்றும் 30.09.2023: இலங்கை கடலோரப்பகுதிகள்,  தெற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய  மத்திய-வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.


 01.10.2023 மற்றும் 02.10.2023: இலங்கை கடலோரப்பகுதிகள், தெற்கு வங்கக்கடல் பகுதிகள், மத்திய வங்கக்கடல் பகுதிகள் மற்றும் வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். 


அரபிக்கடல் பகுதிகள்:   


29.09.2023 மற்றும் 30.09.2023: கர்நாடக – கேரள கடலோரப்பகுதிகள் மற்றும் லட்சதீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.