தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்பநிலை 2 - 3 டிகிரி செல்சியஸ்  அதிகமாக இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தென் இந்திய பகுதிகளின் மேல் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழ்நாட்டில் அடுத்த 4 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


07.04.2023 மற்றும் 08.04.2023: தென் தமிழகம் மற்றும் வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது / மிதமான மழை  பெய்யக்கூடும்.


09.04.2023 மற்றும் 10.04.2023: தென் தமிழகம் மற்றும் வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது / மிதமான மழை  பெய்யக்கூடும்.


11.04.2023:  தென் தமிழகம் மற்றும் வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது / மிதமான மழை  பெய்யக்கூடும்.


அதிகபட்ச வெப்பநிலை:


07.04.2023 முதல் 11.04.2023 வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பிலிருந்து 2 - 3 டிகிரி செல்சியஸ்  அதிகமாக இருக்கக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


மழை இருக்கும் என வானிலை மையம் கூறினாலும் வெயிலின் தாக்கம் கடுமையாக உள்ளது. கடந்த ஒரு வாரமாக ஈரோடு, கரூர் பரமத்தி ஆகிய மாவட்டங்களில் 100 டிகிரி பாரன்ஹீட் பதிவாகி வருகிறது. தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் பதிவான அதிகபட்ச வெப்பநிலை என்பது கரூர் பரமத்தியில் பதிவாகியுள்ளது. கரூர் பரமத்தி 39.5, ஈரோடு 38.8, சேலம் 38.1, திருச்சி 37.7 டிகிரி செல்சியஸ். சென்னை பொறுத்தவரை வெப்பநிலை குறைவாக இருந்தாலும் வெயிலின் தாக்கம் அதிகமாக தான் உள்ளது. சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸும் குறைந்த பட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகியுள்ளது.


சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:


அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.


கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்): 


பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி), அடவிநயினார்கோயில் அணை (தென்காசி), மணிமுத்தாறு (திருநெல்வேலி), புத்தன் அணை (கன்னியாகுமரி), திற்பரப்பு (கன்னியாகுமரி) தலா 1 செ.மீ மழை பதிவாகியுள்ளது.


மீனவர்களுக்கான எச்சரிக்கை  ஏதுமில்லை என வானிலை மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.