தமிழ்நாட்டில் அடுத்த சில தினங்களுக்கு வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 


23.02.2023 மற்றும் 24.02.2023:  தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். ஓரிரு  இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக  இருக்கக்கூடும்.  குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ்  குறைவாக இருக்கக்கூடும்.  


25.02.2023 முதல் 27.02.2023 வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். 


சென்னை மற்றும் புறநகர் பகுதிகள்:


அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.  அதிகபட்ச வெப்பநிலை 33-34 டிகிரி செல்சியஸ் மற்றும்  குறைந்தபட்ச வெப்பநிலை 21-22 டிகிரி செல்சியசை ஒட்டி  இருக்கக்கூடும்.  கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு மற்றும் மீனவர்களுக்கான எச்சரிக்கை எதுவும் இல்லை என வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


தமிழ்நாட்டில் சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கடந்த ஒரு வார காலமாக வழக்கத்தை விட அதிகமாக பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக சென்னை மற்றும் புறநகர் பகுதியில்  இன்று காலை 8 மணிவரை மூடு பணி நிலவி வருவதால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். இதனால், முகப்பு விளக்கை எரியவிட்டு வாகனங்கள் ஊர்ந்து சென்றன. 


கடும் பனிமூட்டம்:


கடுமையான பனிமூட்டம் காரணமாக சென்னை விமான நிலையத்தில் விமானங்கள் அரை மணி நேரம் தாமதமாக வந்தடைந்தது. இதேபோன்று பல்வேறு விமானங்கள் பனிமூட்டத்தால் தரையிறக்க முடியாமல் சிறிது தாமதமாக தரையிறக்கப்பட்டது. மேலும்  ரயில்களின் வேகமும் குறைக்கப்பட்டுள்ளது.


சென்னை போலவே பிற மவட்டங்களிலும் அதிகாலையில் கடும் பனி நிலவி வருகிறது. நாகை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் காலையில் கடும் பனிமூட்டத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. கடலூரில் கடும் பனிமூட்டத்தால் வீடுகள் முழுவதும் பனிப்போர்வையால் மூடப்பட்டது. மேலும் கடலூர்-சிதம்பரம் நெடுஞ்சாலை, கடலூர்-விருத்தாசலம் நெடுஞ்சாலையில் சென்ற சில வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகள் தெரியாத அளவு பனி இருந்ததால், எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல், சாலையோரம் வாகனங்களை நிறுத்தி விட்டு பனி விலகிய பின்னரே புறப்பட்டு சென்றனர். மேலும் பெரும்பாலான வாகன ஓட்டிகள் காலை 8 மணி வரை முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டபடியே சென்றனர். அந்த அளவிற்கு பனிமூட்டம் கடுமையாக இருந்தது.


அடுத்து வரும் சில தினங்களுக்கு பனிமூட்டம் தொடரும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் வரும் நாட்களிலும் இதே போன்ற சூழல் தான் இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. மேலும் காலை மற்றும் மதிய வேலையில் வெப்பநிலை 2-3 டிகிரி அதிகமாக இருக்கும் என்பதால், வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது. வெயிலில் செல்லும் மக்கள் கவனத்துடன் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.