மலையேறிய 13 வயது சிறுமி.. ஐ.ஏ.எஸ்., அதிகாரியான கதை!  - யார் இந்த அமுதா ஐ.ஏ.எஸ்.

பெரிதும் பிரபலமடையாத உணவுப் பாதுகாப்புத்துறையின் இயக்குநராகப் பணியாற்றி வந்த அமுதாவை கருணாநிதியின் இறுதிச் சடங்கில் ஒட்டுமொத்த தேசமும் கவனித்தது .

Continues below advertisement

ஐந்து முறை தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த கருணாநிதி 2018 ஆகஸ்ட் மாதம் உயிரிழந்தார். பெரும் ஆளுமையைத் தமிழும் தமிழ்நாடும் இழந்து நின்ற சமயம் அவரை அடக்கம் செய்யவிருந்த சென்னை மெரினா கடற்கரைப்பகுதி அத்தனை இறுக்கத்துடன் காணப்பட்டது. அவரை நல்லடக்கம் செய்வதற்கான இடத்தின் மீது எழுந்த பிரச்னை முதல், இறுதி மரியாதை செய்ய வந்த பிரதமர் உள்ளிட்ட தேசியத் தலைவர்களை எதிர்கொண்டது வரை ’தனியொருத்தி’ என தலைமையேற்றுச் சமாளித்தார் ஒரு ஐ.ஏ.எஸ்.அதிகாரி. அவர்தான் அமுதா ஐ.ஏ.எஸ்., சோகத்தில் மூழ்கியிருந்தவர்களுக்கு இடையே வெள்ளை சல்வார் அணிந்த அமுதா மட்டும் மின்னல் போலச் சுழன்று இயங்கிக் கொண்டிருந்தார்.

Continues below advertisement

அதுவரை  பெரிதும் பிரபலமடையாத உணவுப் பாதுகாப்புத்துறையின் இயக்குநராகப் பணியாற்றி வந்த அமுதாவை கருணாநிதியின் இறுதிச் சடங்கை தொலைக்காட்சியின் வழியாகப் பார்த்துக்கொண்டிருந்த ஒட்டுமொத்த தேசமும் கவனித்தது அன்றுதான்.  27 வருடப் பணி அனுபவம் மிக்கவர், அரசின் பல்வேறு துறைகளில் நிர்வாகத் தலைமை பொறுப்பில் பணியாற்றியவர், தருமபுரி மாவட்டக் கலெக்டர், காஞ்சிபுரம் மாவட்டக் கலெக்டர், கூடுதல் தலைமைத் தேர்தல் அதிகாரி, சென்னை பெருவெள்ள மீட்புப் பணிகளில் பாய்மரம் எனப் பணியாற்றிய சிறப்பு அதிகாரி, கரைபடியாத கரங்களுக்குச் சொந்தக்காரர் என பல அடையாளங்கள் அமுதாவுக்கு இருந்தாலும் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் இறுதி மரியாதை நிகழ்வுகளை ஒருங்கிணைத்து நடத்தியதுதான் மத்திய அரசு அமுதாவை கவனிக்கக் காரணமாக இருந்தது. 2020ல் பிரதமர் அலுவலகத்தின் கூடுதல் செயலாளராக நியமிக்கப்பட்டார். 


முத்தமிழ் அறிஞரே அமுதாவின் கவிதைக்கு ரசிகர்

முத்தமிழ் அறிஞர் என அறியப்பட்ட கருணாநிதி அமுதாவின் தமிழுக்கு விசிறி என்பது கூடுதல் தகவல். ஈரோடு கோபிச்செட்டிப்பாளையத்தின் கூடுதல் கலெக்டராக இருந்த அமுதா கருணாநிதி கலந்துகொண்ட நிகழ்வொன்றில் நன்றியுரையாகத் தமிழ் கவிதை ஒன்றை வாசிக்க அதைக் கேட்ட கருணாநிதி, ‘தொடர்ந்து கவிதை எழுதுங்கள்!’ என வாழ்த்திவிட்டுச் சென்றார். பொதுவாகப் பழங்குடிகள் என்றாலே அரசாங்கத்தின் மீது நம்பிக்கையற்றவர்களாக இருப்பார்கள் என்ற நிலையை தான் கூடுதல் கலெக்டராக இருந்த காலத்தில் மாற்றிக் காட்டினார் அமுதா. சத்தியமங்கலம் வனப்பகுதிகளுக்குத் தனிமனிதியாகப் பயணிப்பது அங்கே பழங்குடிப் பெண்களிடம் உரையாடுவது விழிப்புணர்வு ஏற்படுத்துவது என அமுதா அசகாயமாகச் செய்த பணிகள் ஏராளம். 


’விளையும் பயிர் முளையிலேயே தெரியும்’ என்பது அமுதா பெரியாசாமிக்குப் பொருந்தும். 51 வயதான அமுதா மதுரை மாவட்டத்தில் பிறந்தவர். படிப்பில் சுட்டியென்றால், விளையாட்டில் நிஜமாகவே கில்லி. கபடிப் போட்டிகளில் தேசிய அளவில் தங்கப் பதக்கம் வென்றவர். 'அச்சம் கிலோ என்ன விலை?' என 13 வயதிலேயே மலையேற்றப் பயிற்சிகளை துச்சமென மேற்கொண்டவர்.


தனது தாத்தா பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்த அமுதாவுக்கு அவர்களுக்கான ஓய்வூதியம் குறித்து மதுரை கலெக்டர் அலுவலகத்தில் விசாரிக்கச் சென்ற போதுதான் கலெக்டராகவும் கனவும் உருவாகியிருக்கிறது. வேளாண் பட்டதாரியான அமுதா ஐ.பி.எஸ். தேர்வில் முதலிடம் பிடித்தாலும் கனவுக்கு காம்பன்சேஷன்கள் இல்லையென ஐ.ஏ.எஸ். போட்டித் தேர்வுக்கு பயிற்சி எடுத்து 1994ல் தமிழ்நாடு கேடர் அதிகாரியாகத் தேர்ச்சி பெற்றார். 

தமிழுக்கு அமுதென்று பேர் என்பார்கள். தமிழும் அதன் அமுதமும் பிரிக்க முடியாதது. தமிழ்நாடும் அமுதா ஐ.ஏ.எஸ்.ஸும் கூட அப்படித்தான். அதனால்தான் அவரை மத்திய அரசுப் பொறுப்பிலிருந்து விடுவிக்கக் கோரி மீண்டும் தன்னோடு அரவணைத்துக் கொண்டுள்ளது. 

மீண்டும் வருக அமுதா!  

Continues below advertisement
Sponsored Links by Taboola