TN Trekking Spots: ட்ரெக்கிங் மேற்கொள்ள ஆன்லைனில் முன்பதிவு செய்வது எப்படி என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்.


தமிழ்நாடு ட்ரெக்கிங் திட்டம்:


இயற்கை ஆர்வலர்களை மகிழ்விக்கும் விதமாக, தமிழ்நாடு அரசு 40 தேர்ந்தெடுக்கப்பட்ட மலையேற்ற பாதைகளை பொது மக்களுக்காக திறந்து வைத்துள்ளது. வனப்பகுதியை ஒட்டியுள்ள உள்ளூர் மக்களுக்கு நிலையான வாழ்வாதாரத்தை ஏற்படுத்தவும், வனம் மற்றும் வன உயிரின பாதுகாப்பிற்கு வலுசேர்க்கும் விதமாகவும் இந்த ‘தமிழ்நாடு மலையேற்ற திட்டம்’ வடிவமைக்கப்பட்டுள்ளது. இயற்கை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வையும் இந்த திட்டம் மக்களிடையே ஏற்படுத்தும் என நம்பப்டுகிறது. மேலும், தமிழக சுற்றுலாத் துறையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் விதமாகவும் இந்த திட்டம் இருக்கும் என நம்பபப்டுகிறது.


40 மலையேற்றப் பாதைகள்:


தமிழ்நாடு அரசால் அடையாளம் காணப்பட்டுள்ள மலையேற்றப் பாதைகள் மொத்தம் 3 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. அதன்படி, இந்த பாதைகள் எளிதான, மிதமான மற்றும் கடினமான என 3 பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.


எளிமையான மலையேற்றப் பாதைகள்:


கய்ர்ன் ஹில் (நீலகிரி), லாங்வுட் ஷோலா (நீலகிரி), மாணம்போலி (கோவை), டாப் ஸ்லிப் – பண்டாரவரை (கோவை), பரலியார் (கோவை), சின்னார் சோதனைச்சாவடி கோட்டாறு (திருப்பூர்), குற்றாலம் செண்பகதேவி நீர்வீழ்ச்சி (தென்காசி), தீர்த்தப்பாறை (தென்காசி),  காரப்பாறை (தேனி), 0-பாயிண்ட் – கருங்களம் நீர்வீழ்ச்சி (திண்டுக்கல்), குத்திராயன் சிகரம் (கடினம்), ஐயூர் – சாமி எரி (கிருஷ்ணகிரி), நகலூர் – சன்னியாசிமலை (சேலம்), ஏலகிரி சுவாமிமலை (திருப்பத்தூர்), குடியம் குகைகள் (திருவள்ளூர்)


மிதமான மலையேற்றப் பாதைகள்:


கரிகையூர் முதல் போரிவரை ராக் பெயிண்டிங் (நீலகிரி), அவலாஞ்சி (காலிஃபிளவர் ஷோலா)- கோலாரிபெட்டா (நீலகிரி), ஆலியார் கனால் பேங்க் (கோவை), சாடிவயல் – சிறுவாணி (கோவை), காலிகேசம் பாலமோர் (திருப்பூர்), இஞ்ஜிக்கடவு (கன்னியாகுமரி), காரையார் மூலக்கசம் (நெல்லை), சின்ன சுருளி – தென்பழனி (தேனி), குரங்கனி சாம்பலாறு (தேனி), செண்பகத்தோப்பு – புதுப்பட்டி (விருதுநகர்), சோலார் ஆப்சர்வேட்டரி – குண்டாறு (0-பாயிண்ட்) (திண்டுக்கல்), குரும்பப்பட்டி உயிரியல் பூங்கா – குண்டூர் (சேலம்), ஜலகம்பாறை (திருப்பத்தூர்)


கடினமான மலையேற்றப் பாதைகள்:


கரிகையூர் முதல் ரங்கசாமி சிகரம் (நீலகிரி), பார்சன்ஸ் வேலி முதல் முக்குர்த்தி குடில் (நீலகிரி), அவலாஞ்சி – கோலாரிபெட்டா (நீலகிரி), அவலாஞ்சி (காலிஃபிளவர் ஷோலா) – தேவார்பெட்டா (நீலகிரி), ஜீன் பூல் (எளிது), நீடில் ராக் (நீலகிரி), செம்புக்கரை – பெருமாள்முடி (கோவை), வெள்ளியங்கிரி மலை (கோவை), கல்லாறு கொரக்கநாதர் கோயில் (நெல்லை), தாடகை மலையேற்றப்பாதை – குட்லாடம்பட்டி நீர்வீழ்ச்சி (மதுரை), வட்டகானல் – வெள்ளகவி (திண்டுக்கல்), கொண்டப்ப நாயக்கன்பட்டி குண்டூர் (சேலம்)


ஆன்லைனில் முன்பதிவு செய்வது எப்படி?


www.trektamilnadu.com என்ற பிரத்யேக முன்பதிவு வலைதளத்தின் மூலம் மலையேற்றம் மேற்கொள்பவர்கள் தங்கள் முன்பதிவினை எளிதாக மேற்கொள்ளலாம். இந்த இணையதளத்தில் குறிப்பிட்ட பகுதிகளை புரிந்துகொள்ளும் வகையில் புகைப்படம், காணொலிக் காட்சிகள், 3D அனிமேஷன். மலையேற்ற பாதைகள் தொடர்பான அத்தியாவசிய விவரங்கள், விதிமுறைகள் குறிப்பிடப்பட்டுள்ளன. மேலும், இவ்வலைதளத்தின் மூலம் மலையேற்றம் மேற்கொள்பவர்கள் 100% இணையவழி பணப்பரிவர்த்தனை மேற்கொண்டு மலையேற்றத்திற்கான நுழைவு சீட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ள இயலும்.


கட்டண விவரங்கள்:



  • எளிமையான பிரிவு மலையேற்றத்திற்கான கட்டணம் குறைந்தபட்சமாக ரூ.599 தொடங்கி அதிகபட்சமாக ரூ.1,449 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

  • மிதமான பிரிவு மலையேற்றத்திற்கான கட்டணம் குறைந்தபட்சமாக ரூ.1,199 தொடங்கி அதிகபட்சமாக ரூ.3,549 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

  • கடினமான பிரிவு மலையேற்றத்திற்கான கட்டணம் குறைந்தபட்சமாக ரூ.1,699 தொடங்கி அதிகபட்சமாக ரூ.5,099 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


இத்திட்டத்தின் கீழ் மலையேற்றம் மேற்கொள்ளும் அனைத்து பங்கேற்பாளர்கள் மற்றும் வழிகாட்டிகளுக்குக்கும் காப்பீடு வழங்கப்படுகிறது. 


யாருக்கெல்லாம் அனுமதி?


18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் மலையேற்றத்திற்கான முன்பதிவு மேற்கொள்ள அனுமதிக்கப்படுவர். 18 வயதிற்குட்பட்டவர்கள் பெற்றோர் / பாதுகாவலரின் ஒப்புதல் கடிதத்துடன் மலையேற்றம் மேற்கொள்ளலாம். 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் எளிதான மலையேற்ற பாதைகளுக்கு மட்டுமே அனுமதிக்கப்படுவர். அதுவும் பெற்றோர் அல்லது பாதுகாவலரின் துணையோடு மட்டுமே அனுமதிக்கப்படுவர்.


300 பேருக்கு வேலைவாய்ப்பு:


மலையேற்ற வழிகாட்டிகளாக காடுகள் குறித்த பாரம்பரிய அறிவைக் கொண்ட 50-க்கும் மேற்பட்ட பழங்குடியின மற்றும் வனங்களை ஒட்டியுள்ள கிராமங்களிலிருந்து 300-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் அடையாளம் காணப்பட்டு. மலையேற்ற வழிகாட்டிகளாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு வன ஒழுக்கம், திறன் மேம்பாடு. முதலுதவி, விருந்தோம்பல் மற்றும் சுகாதாரம், பல்லுயிர் பாதுகாப்பு போன்றவற்றில் போதுமான தொழில்முறை பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. மலையேற்றத்திற்கு வரும் ஆர்வலர்களின் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் அளித்து தேர்ந்தெடுக்கப்பட்ட மலையேற்ற வழிகாட்டிகளுக்கு அவசர நிலைகளைக் கையாளுவதற்கான பாதுகாப்பு நெறிமுறை பயிற்சிகளும் வழங்கப்பட்டுள்ளன. தேவையான மலையேற்ற உபகரணங்களும் வழங்கப்பட்டுள்ளன.