தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பின் இரண்டாவது அலை கடந்த ஒரு மாதமாக மிகவும் தீவிரம் அடைந்துள்ளது. அந்தவகையில் கடந்த சில நாட்களாகவே தமிழ்நாட்டின் தொற்று பாதிப்பு 30ஆயிரத்தை கடந்து பதிவாகி வருகிறது. இந்நிலையில் தமிழ்நாட்டில் இன்றைய தொற்று பாதிப்பு 34,875ஆக பதிவாகியுள்ளது. மேலும் இன்று ஒரே நாளில் தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 365ஆக  உள்ளது. 


மேலும் மாவட்ட வாரியாக பார்க்கும் போது சென்னையில் அதிகபட்சமாக 6297 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது. அதை தொடர்ந்து கோவை மாவட்டத்தில் 3250 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது. அதேபோல் மரணங்களை பொறுத்தவரை சென்னையில் அதிகபட்சமாக 91 பேரும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 46 பேரும் இன்று ஒரே நாளில் தொற்று பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். தற்போது தமிழ்நாட்டில் தொற்று பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை தற்போது 2,53,576 பேர் ஆக உள்ளது. 




தமிழ்நாட்டில் இதுவரை 16,99,225 பேர் கொரோனா தொற்று பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளனர். இவர்களில் இதுவரை 14,26,915 பேர் தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். இன்று ஒரேநாளில் 23,863 பேர் தொற்று பாதிப்பிலிருந்து குணம் அடைந்துள்ளனர். கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் தொற்று பாதிப்பு அதிகரித்தாலும் குணம் அடைந்து வீட்டிற்கு செல்வோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவது சற்று ஆறுதலை தரும் செய்தியாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.