திண்டுக்கல் மாவட்டத்தின் இருவேறு இடங்களில் நடந்த விபத்துகளில் 30க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


என்னதான் சாலைகளில் கவனமாக வாகனங்களில் சென்றாலும் சில நேரங்களில் விபத்துகளில் சிக்குவது உண்டு. அதேசமயம் கட்டுபாடற்ற வேகம், சாகசம் செய்ய நினைப்பது, வாகனங்களை சரியாக பராமரிக்காமல் இருக்கும் நிலையில் விபத்து ஏற்படும் சம்பவங்களும் தினந்தோறும் நடைபெற்று வருகிறது. இப்படியான நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தின் இருவேறு இடங்களில் விபத்து நடந்துள்ளது. 


திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பகுதியில் உள்ள ரங்கநாதபுரத்தில் டிராவல்ஸ் வேன் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இதில் 6 பேர் காயமடைந்தனர். இதுதொடர்பாக வேடசந்தூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் காயமடைந்தவர்களை சிகிச்சைக்காகவும் அனுப்பி வைத்தனர். அதேபோல் பழனி பைபாஸ் சாலை அருகே டிராவல்ஸ் பேருந்து ஒன்று சென்றுக் கொண்டிருந்தது. இதன் பின்னால் வந்த சரக்கு வாகனம் எதிர்பாராதவிதமாக மோதியதில் 23க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


ஏற்கனவே கிறிஸ்துமஸ் தொடர் விடுமுறை, பள்ளி, கல்லூரிகளுக்கு தேர்வு விடுமுறை ஆகியவை இருப்பதால் பலரும் குடும்பத்துடன் சுற்றுலா செல்ல தொடங்கியுள்ளனர். அதுமட்டுமல்லாமல் பல இடங்களில் பனியின் தாக்கம் அதிகமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் வாகனங்கள் விபத்தில் சிக்கும் சம்பவங்களும் நிகழ்ந்து வருகிறது. இப்படியான நிலையில் திண்டுக்கலில் நடந்த விபத்து சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


தெலங்கானாவில் நிகழ்ந்த சோகம்


முன்னதாக தெலங்கானா மாநிலம் நாராயணப்பேட்டை மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் 2 கார்கள் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதிக் கொண்டது. இந்த விபத்தில் 2 கார்களில் இருந்த 2 பெண்கள், ஒரு குழந்தை உட்பட 5 பேர் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 4 பேர் காயமடைந்தனர். விபத்தில் சிக்கிய கார் ஒன்று கர்நாடகாவில் இருந்து ஹைதராபாத் நோக்கி சென்றதாகவும், மற்றொன்று ஒடிசாவில் இருந்து விசாகப்பட்டினம் நோக்கி வந்ததாகவும் போலீசார் நடத்திய விசாரணையில் தெரிய வந்தது. இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.




மேலும் படிக்க: Dayanidhi Maaran: "கழிவறை கழுவுகிறார்கள்" இந்தி பேசுபவர்கள் குறித்து தயாநிதி மாறன் சர்ச்சை - கோபப்பட்ட பிகார் துணை முதல்வர்!