கோவை - பொள்ளாச்சி இடையே முன்பதிவு இல்லாத ரயில் சேவை துவக்க விழா கோவை ரயில் நிலையத்தில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கலந்து கொண்டு, ரயில் சேவையை கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், சேலம் கோட்ட ரயில்வே மேலாளர் பங்கஜ் குமார் சின்கா, உதவி மேலாளர் சிவலிங்கம் மற்றும் ரயில்வே துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


இந்நிகழ்வில் சிறப்புரையாற்றிய மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பேசுகையில், “தமிழகத்தின் தொழில்துறை பகுதிகளான கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, மேட்டுப்பாளையம் ஆகிய பகுதிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு, இப்பகுதிகளில் ரயில்வே துறை மேம்பாட்டுக்காக மத்திய அரசு சார்பில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறினார். கோவை பொள்ளாச்சி இடையே இன்று துவக்கப்பட்டுள்ள இந்த ரயில் சேவை, வேலைக்காக தினந்தோறும் கோவை-பொள்ளாச்சி இடையே ரயிலில் பயணிக்கும் பொதுமக்களுக்கு பெரிதும் உதவும் எனக் குறிப்பிட்டார்.




இந்நிகழ்வில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பேசியதாவது, ”கோவை - பொள்ளாச்சி இடையே முன்பதிவில்லா ரயில் சேவை வேண்டும் என்ற மக்களின் நீண்ட நாள் கோரிக்கை, ஒரே மாதத்தில் மிக வேகமாக மத்திய ரயில்வே அமைச்சரால் நிறைவேற்றி தரப்பட்டுள்ளது. இந்தாண்டு பட்ஜெட்டில் 6000 கோடி ரயில்வே துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 10 புதிய வழித்தடங்ககள் கொடுக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் ஆட்சியில் வெறும் 800 கோடி ரூபாய் தான் 2009 முதல் 2014 ஆம் ஆண்டு வரை ரயில்வே துறைக்கு ஒதுக்கப்பட்டது. சென்னையில் இருந்து கோவைக்கும், சென்னையிலிருந்து திருநெல்வேலிக்கும் வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. விரைவில் கோவையிலிருந்து பெங்களூருக்கு வந்தே பாரத் ரயில் இயக்கப்பட உள்ளது.


தமிழகத்தில் கோயம்புத்தூர், மேட்டுப்பாளையம், உதகை, திருப்பூர், சேலம் உட்பட 75 ரயில் நிலையங்கள் அம்ருத் பாரத் திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்பட உள்ளன. உதயநிதி ஸ்டாலின் கருணாநிதி கிடையாது. இவர் அரசியலில் கத்துக்குட்டியாக இருக்கிறார். பக்குவப்பட்ட தலைவராக இருக்க வேண்டும். மத்திய அரசுடன் இணக்கமாக செயல்பட்டால் தான் தமிழக அரசுக்கு நல்ல பலன் கிடைக்கும். எந்த இயற்கை பேரிடர் என்றாலும் சேவை மன்பானமையுடன் பாஜகவும் ஆர்எஸ்எஸ் அமைப்பும் எப்போதும் முன் நிற்கும். மத்திய அரசின் அனைத்து மீட்பு குழுக்களும் பேரிடரின் போது அனுப்பப்பட்டு உதவி செய்யப்பட்டது. அதேபோல் பொதுவாக பேரிடர் ஆய்வு செய்ய வரும் மத்திய அரசு குழு ஒரு வாரத்திற்கு பிறகு தான் வருவார்கள், இப்போது உடனடியாக வந்து ஆய்வு செய்துள்ளனர்' எனக் கூறினார்.