சென்னை புறநகரில் 100 ஏக்கர் பரப்பளவில் தீம் பார்க் அமைக்கப்படும் என தமிழ்நாடு சுற்றுலாத்துறை தெரிவித்துள்ளது. 5 ஆண்டுகளில் இந்த தீம் பார்க் தனியார் உதவியுடன் கட்டமைக்கப்படும் எனவும் சுற்றுலாத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (26.9.2023) தலைமைச் செயலகத்தில் “தமிழ்நாடு சுற்றுலா கொள்கை  2023”-யை வெளியிட்டார். 

தமிழ்நாடு சுற்றுலா கொள்கை – 2023ன் சிறப்பம்சங்கள்


தொழில் அந்தஸ்து:


 

சுற்றுலாத் திட்டங்களுக்கு தொழில் அந்தஸ்தை வழங்குகி அதன்மூலம் இதுவரை தொழில்துறை திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட அதே பலன்களை சுற்றுலாத் துறைக்கும் விரிவுபடுத்தி, சுற்றுலாத்துறையில் ஈடுபட்டு வரும் பல்வேறு நிலையிலான  பங்குதாரர்களின் நீண்டகால கோரிக்கையை சுற்றுலா கொள்கை பூர்த்தி செய்கிறது.

முன்னுரிமை சுற்றுலா பிரிவுகள்:


சாகச சுற்றுலா, பொழுதுபோக்கு சுற்றுலா, கேரவன் சுற்றுலா, கிராமப்புற மற்றும் தோட்ட சுற்றுலா, கடலோர சுற்றுலா, கலாச்சார சுற்றுலா, மருத்துவம் மற்றும் ஆரோக்கிய சுற்றுலா, ஆன்மீக சுற்றுலா, சுற்றுச்சூழல் சுற்றுலா, கூட்டங்கள், ஊக்கத்தொகைகள், மாநாடுகள் மற்றும் கண்காட்சிகள் (MICE) சுற்றுலா, பாரம்பரிய சுற்றுலா மற்றும் திரைப்படச் சுற்றுலா ஆகிய 12 முன்னுரிமை சுற்றுலாப் பிரிவுகளின் வளர்ச்சியினை நோக்கமாக கொண்டுள்ளது. 

 

நிலைப்படுத்தப்பட்ட சுற்றுலா தலங்கள் மற்றும் வழித்தடங்கள் ஆகியவற்றின் மேம்பாட்டிற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு, இந்த பகுதிகளில் மேற்கொள்ளப்படும் திட்டங்களுக்கு ஊக்கத்தொகை மற்றும் மானியங்கள் அளிக்கப்படும்.

சுற்றுலாத் திட்டங்களுக்கு ஒற்றைச் சாளர அனுமதி:


அனைத்து தகுதியான சுற்றுலா திட்டங்களுக்கும் ஒற்றை சாளர அனுமதியுடன் கூடிய நெறிப்படுத்தப்பட்ட ஒப்புதல் செயல்முறை மேற்கொள்ளப்படும்.


தனியார் முதலீட்டை ஊக்குவிப்பதற்கு தகுதியான சுற்றுலாத்திட்டங்கள்:


தனியார் முதலீட்டை ஊக்குவிப்பதற்காக முக்கிய கவனம் செலுத்தும் அடிப்படையில் பொழுதுபோக்கு பூங்காக்கள், பாரம்பரிய ஹோட்டல்கள், அனுபவமிக்க ஓய்வு விடுதிகள், சுற்றுச்சூழல்-குடிசைகள்/ முகாம்கள், ரோப்வேகன்கள், ஆரோக்கிய ஓய்வு விடுதிகள், ஓசியானேரியம் / மீன்வளம், கோல்ஃப் மைதானம், தோட்டம் / பண்ணை சுற்றுலா திட்டங்கள், அருங்காட்சியகங்கள், சாகச சுற்றுலா திட்டம், குரூஸ் சுற்றுலா திட்டம் மற்றும் கேரவன் சுற்றுலா திட்டம் ஆகிய 13 தகுதியான சுற்றுலாத் திட்டங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. 

 

ஊக்கத்தொகை


வகை A திட்டப்பணிகள் (ரூ.50 கோடி வரையிலான முதலீட்டில் செயல்படுத்தப்படும் திட்டங்கள்)


 

25% அதிகபட்சமாக ரூ.1.50 கோடி வரை மூலதன மானியம் வழங்கப்படும்.

 

பெண்கள் / எஸ்சி / எஸ்டி / திருநங்கைகள் / மாற்றுத்திறனாளி (திவ்யாங்) நபர்களால் ஊக்குவிக்கப்படும் திட்டங்களுக்கு 5% அதிகபட்சமாக ரூ.5 லட்சம் வரை கூடுதல் மூலதன மானியம் வழங்கப்படும்.

 

நிறுவனங்களின் விரிவாக்கத்திற்கு 5%  அதிகபட்சமாக ரூ.25 லட்சம்  வரை  கூடுதல் மூலதன மானியம் வழங்கப்படும். 

                      

குறு நிறுவனங்களுக்கு 10% அதிகபட்சமாக ரூ.5 லட்சம் வரை கூடுதல் மூலதன மானியம் வழங்கப்படும்.

 

20 நபர்களுக்கு மேல் வேலை வழங்கும் நிறுவனங்களில் உள்ள பணியாளர்களுக்கு ஊதிய ஊக்கத்தொகை ஆண்டொன்றுக்கு ரூ.24,000 வீதம் ஒரு பணியாளருக்கு 3 ஆண்டுகள் வரை வழங்கப்படும்.

 

குறு/சிறு நிறுவன, புதிய மற்றும் விரிவாக்க சுற்றுலாத் திட்டங்களுக்கான வட்டி மானியத்தை திரும்ப பெறுவதற்கும், தேசிய மற்றும் பன்னாட்டு தரச்சான்றிதழ்கள் பெறுவதற்கான மானியமும் வழங்கப்படும். 

வகை B திட்டப்பணிகள் (ரூ.50 கோடி முதல் 200 கோடி வரையிலான முதலீட்டில் செயல்படுத்தப்படும் திட்டங்கள்)


5% அதிகபட்சமாக ரூ. 3 கோடி வரை மூலதன மானியம் வழங்கப்படும்.

 

20 பேருக்கு மேல் வேலை வழங்கும் நிறுவனங்களில் உள்ள பணியாளர்களுக்கு ஊதிய ஊக்கத்தொகை ஆண்டொன்றுக்கு ரூ.24,000 வீதம் ஒரு பணியாளருக்கு 3 ஆண்டுகள் வரை வழங்கப்படும். 

 

தேசிய தரச்சான்றிதழ்கள் பெறுவதற்கு ரூ.2 இலட்சம் வரையிலான மானியமும், பன்னாட்டு தரச்சான்றிதழ்கள் பெறுவதற்கு ரூ.10 இலட்சம் வரையிலும் மானியம் வழங்கப்படும்.  

 

நிறுவனங்களில் பசுமை முன் முயற்சி திட்டங்களுக்கான ஊக்கத்தொகையாக 25 சதவீதம், அதிகபட்சமாக ரூ.25 இலட்சம் வரை வழங்கப்படும். 

 

வகை C திட்டப்பணிகள் (ரூ.200 கோடிக்கு மேலான முதலீட்டில் செயல்படுத்தப்படும் திட்டங்கள்)


நிறுவனங்களின் திட்டங்கள் அடிப்படையில் கட்டமைப்பு ஊக்கத்தொகை வழங்கப்படும். 

 

நிறுவன பயன்பாட்டிற்கான மின்கட்டணம் முக்கிய சுற்றுலாத்தலங்களில் புதிய விடுதிகளுக்கு வணிக மின் கட்டணம் மற்றும் நிறுவன மின் கட்டண வித்தியாச தொகை முதலீட்டுத் தொகையில் 10% வரை அதிகபட்சமாக 3 ஆண்டுகளுக்கு திரும்ப வழங்கப்படும். 

 

ரூ.200 கோடிக்கு மேல் முதலீடு செய்யப்பட்டுள்ள மற்றும் குறைந்தபட்சம் 50 நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் புதிய திட்டங்களுக்கு, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி செலுத்திய சான்றிதழ் ஆய்வு அடிப்படையில், மின் பயன்பாட்டில் கட்டணச் சலுகைகள் அதிகபட்சமாக 3 ஆண்டுகளுக்கு திரும்ப வழங்கப்படும்”. இவ்வாறு சுற்றுலா கொள்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.