நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த நாகை மீனவர்கள் 10 பேரை, எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை கைது செய்தது அதிர்ச்சி அளித்துள்ளது. 


படகுடன் கைது செய்யப்பட்ட 10 பேரையும் காங்கேசன் கடற்படை முகாமுக்கு அழைத்து சென்ற இலங்கை கடற்படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தில் மத்திய, மாநில அரசுகள் தலையிட்டு மீனவர்களை மீட்க வேண்டும் என பாதிக்கப்பட்டுள்ள மீனவர்களின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். 


இதனிடையே மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள அனைத்து மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விடுவிக்க இலங்கை அரசை வலியுறுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெறுவது மீனவர்கள் இடையே மிகுந்த அச்ச உணர்வை உண்டாக்குகிறது. கடந்த ஜூன் 22 ஆம் தேதி ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தைச் சேர்ந்த 22 மீனவர்களை, 3 படகுகளோடு இலங்கை கடற்படை கைது செய்ததை சுட்டிக்காட்டி அவர் இந்த கடிதத்தை எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 


இதனிடையே ராமேஸ்வர மீனவர்கள் கைது சம்பவத்தை கண்டித்து அப்பகுதியில் உள்ள சக மீனவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.