தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்காக அடிக்கல் நாட்டும் நிகழ்வில் பிரதமர் மோடி நேற்று பங்கேற்றார். அப்போது, ரூ.17,300 கோடி மதிப்பிலான திட்டங்களைத் தொடங்கி வைத்து பேசினார். இந்த விழாவில் மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் சர்பானந்த சோனாவால், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய இணையமைச்சர் டாக்டர் எல். முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர். அதேபோல், இந்த நிகழ்வில் தமிழக அரசு பொதுப் பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு மற்றும் தூத்துக்குடி எம்.பி கனிமொழி ஆகியோர் பங்கேற்றனர்.




விழாவில் தனது உரையை துவங்கிய பிரதமர் மோடி,விருந்தினர்கள் பெயர்களை சொல்லி அவர்களை வரவேற்றார் பிரதமர் மோடி. அதன்படி, ஆளுநர் ரவி மற்றும் மத்திய அமைச்சர்கள் எல்.முருகன் போன்றோர் பெயரை உச்சரித்த பிரதமர் மோடி, தமிழக அமைச்சர் எ.வ.வேலு மற்றும் தூத்துக்குடி எம்பி கனிமொழி ஆகியோர் பெயரை உச்சரிக்கவில்லை. மாறாக, மாநில அமைச்சர் என்று மட்டுமே பிரதமர் மோடி குறிப்பிட்டார். கனிமொழி பெயரையோ, அவரை வரவேற்கவோ செய்யவில்லை. பின்பு தனது உரையை தொடர்ந்த பிரதமர் மோடி தமிழக அரசு தொடர்பாக குற்றச்சாட்டுகளை முன்வைத்தும் குறிப்பிடத்தக்கது.




தமிழகம் வந்துள்ள பிரதமர் மோடி தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்காக அடிக்கல் நாட்டினார். அப்போது, ரூ. 17,300 கோடி மதிப்பிலான திட்டங்களைத் தொடங்கி வைத்து பேசினார். வணக்கம் என தமிழில் கூறி உரையை தொடங்கிய பிரதமர் மோடி, “தூத்துக்குடியில் வளர்ச்சிக்கான புதிய அத்தியாயம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.திட்டங்களின் தொடக்கம் என்பது அனைவரின் முன்னேற்றம், வளர்ச்சி, நம்பிக்கையின் எடுத்துக்காட்டு. இந்த திட்டங்கள் இந்தியாவின் முன்னேற்றத்துக்கு முக்கிய பங்கு வகிக்கும். மக்களின் சேவகனாக கோரிக்கைகளை நான் உங்களின் கோரிக்கைகளை, விருப்பங்களை நிறைவேற்றுகிறேன். முந்தைய காங்கிரஸ் ஆட்சியின்போது கோரிக்கையாக இருந்தவை அனைத்தும் தற்போது நிறைவேற்றப்பட்டு வருகின்றன.




தமிழக வளர்ச்சியில் தமிழர்களின் நலனில் என்றும் அக்கறையோடு இருப்பேன். தமிழகம் வரும்போதெல்லாம் தமிழர்கள் என்மீது பாசத்தை பொழிந்தார்கள். தமிழர்கள் என் மீது காட்டிய அன்பை பல மடங்காக திருப்பி தருவேன். வளர்ச்சியடைந்த நாடு என்ற பாதையை நோக்கி நமது தேசம் சென்று கொண்டிருக்கிறது. இதில் வளர்ச்சியடைந்த தமிழகத்தின் பங்கு அதிக மகத்துவமானது. மத்திய அரசின் திட்டங்கள் மூலம் தமிழகத்தில் சாலை வழி இணைப்புகள் மேலும் சிறப்பாக மாறவுள்ளன.தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளில் தேசிய நெடுஞ்சாலைகள் இணைப்பு அதிகரித்துள்ளது. ஹைட்ரஜன் படகு காசியின் கங்கை ஆற்றில் தனது பயணத்தை தொடங்கவிருக்கிறது. தமிழகத்துக்கும் காசிக்கும் இடையே இருக்கும் நல்ல உறவு மேலும் உறுதியாகவிருக்கிறது. என்னுடைய தொகுதியான காசிக்கு தமிழக மக்கள் அளிக்கும் நன்கொடை இதுவாகும். நாட்டின் சுற்றுலா வளர்ச்சியை மேம்படுத்துவதற்கு எனக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. நான் இங்கே உரையாற்றுவது ஓர் அரசியல் கட்சியின் சித்தாந்தமோ, தனிப்பட்ட கோட்பாடோ கிடையாது. இங்கே நான் உரையாற்றுவது தமிழகத்தின் வளர்ச்சி, முன்னேற்றத்துக்கான கோட்பாடு ஆகும். வளர்ச்சி குறித்த எனது கோட்பாட்டை தமிழக அரசு செய்தியாக வெளியிடுவதில்லை.




தமிழகத்தில் மத்திய அரசின் திட்டங்கள் மறைக்கப்படுகின்றன. தமிழகத்தில் மத்திய அரசின் திட்டங்கள் குறித்து செய்தித்தாள்களில் தமிழக அரசு வெளியிடுவதில்லை. எத்தனை தடைகள் வந்தாலும், அந்தத் தடைகளைத் தாண்டி தமிழகத்தில் வளர்ச்சிக்கான திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தியே தீரும். இந்த துறைமுகம் தூத்துக்குடியில் அமைந்திருக்கலாம். ஆனால், இந்தியா முழுவதும் வளர்ச்சிக்கு இது உந்துதலாக அமையலாம். 2 ஆண்டுகளுக்கு முன்பு துறைமுகம் குறித்து வாக்கு கொடுத்தேன். இன்று அது நடைமுறைக்கு வந்துள்ளது.




இதனால் தமிழகத்துக்கு கூடுதல் வேலை வாய்ப்பு உருவாகும். வ.உ.சி துறைமுகத்தில் உள்ள திட்டங்களால் தமிழகம் பசுமையாக்குதலின் மையமாக மாறும். ரயில் மற்றும் சாலைகளுக்கான வளர்ச்சித் திட்டங்களால் தென் தமிழகம் - கேரளா இடையேயான இணைப்பு மேலும் சிறப்பாகும். 75 கலங்கரை விளக்கங்கள் இந்தியாவின் சுற்றுலா மையங்களாக மாறும். தமிழகத்தில் 1300 கிமீ நீளத்தில் ரயில் பாதை கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 2000 கி.மீ ரயில் பாதை மின்மயமாக்கப்பட்டுள்ளன. மக்களின் வசதி மற்றும் பாதுகாப்புக்காக நூற்றுக்கணக்கான மேம்பாலங்கள், சுரங்கப்பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் 5 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன. சாலை கட்டமைப்பில் சுமார் ரூ.1.5 லட்சம் கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளன. கடந்த 10 ஆண்டுகளில் வஉசி துறைமுகத்தில் கப்பல் போக்குவரத்து 35% அதிகரித்துள்ளது என்றார்.