கோவையில் அரசு கல்லூரி மாணவர் விடுதியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திடீர் ஆய்வு மேற்கொண்டு, மாணவர்களிடம் விடுதிக்கு தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்து கேட்டறிந்தார்.


கோவையில் நாளை நடைபெறும் பல்வேறு அரசு நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விமானம் மூலம் கோவைக்கு வருகை வந்தார். கோவை விமான நிலையத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு திமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்நிலையில் டாக்டர் பாலசுந்தரம் சாலையில் உள்ள டாக்டர் அம்பேத்கர் அரசு கல்லூரி மாணவர் விடுதியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்போது விடுதியில் வழங்கப்படக்கூடிய உணவின் தரம் குறித்தும், விடுதியில் செய்யப்பட்டுள்ள வசதிகள் குறித்தும் நேரடியாக மாணவர்களிடம் கேட்டறிந்தார். மேலும் விடுதி வளாகத்தில் இருக்கக்கூடிய அறைகள் மற்றும் கழிவறை உள்ளிட்டவற்றை நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மாணவர்களுக்கு என்ன வசதிகள் தேவை என்பது குறித்து கேட்டறிந்தார். பின்னர் அந்த வசதிகளை உடனடியாக செய்து கொடுக்க மாவட்ட ஆட்சியருக்கு உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தினார்.




மேலும் மாணவர்களுக்கு விளையாடுவதற்கு தேவையான உபகரணங்கள் இருக்கிறதா என்பது குறித்து கேள்வி எழுப்பிய அவர், தேவையான விளையாட்டு உபகரணங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். இதனை தொடர்ந்து டாக்டர் அம்பேத்கர் அரசு கல்லூரி விடுதி வளாகத்தில் இருந்து வெளியில் வந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,  விடுதி வாசலில்  மாணவர்களுடன் இணைந்து குழுவாக புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இந்த ஆய்வின் போது அமைச்சர் முத்துசாமி மற்றும் மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். நாளை காலை கொடிசியா டி அரங்கில் "நான் முதல்வன்" திட்டம் மூலம் திறன் பயிற்சி பெற்ற கல்லூரி மாணவர்களுக்கு பணி நியமன ஆணைகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்க உள்ளார். இதனைத் தொடர்ந்து கொடிசியா ஏ அரங்கில் காலை 11.30  மணிக்கு கிராம ஊராட்சிகளுக்கு கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழாவில் அவர் கலந்து கொள்கிறார். இதையடுத்து  மாலையில் திமுக ஐடி விங் நிர்வாகிகளுடன் கலந்துரையாட உள்ளார். பின்னர் நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு மாலை விமானம் மூலம் சென்னை திரும்ப உள்ளார்.