அண்ணல் அம்பேத்கரின் பிறந்த நாளான ஏப்ரல் 14 ஆம் தேதி இனி, சமத்துவ நாள் என்று கொண்டாடப்படும் என சட்டப்பேரவையில் விதி 110-ன் கீழ் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். தொடர்ந்து ஏப்ரல் 14 ஆம் தேதி, சட்டமேதை டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாள் அரசு அலுவலகங்களில் கொண்டாடப்ட்டது. இந்நிலையில் தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் இருந்த டாக்டர் அம்பேத்கர் புகைப்படம் வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும்  மற்ற பணியாளர்கள் ஒன்றிணைந்து அகற்றப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் தமிழக சட்டமன்றத்தில் அறிவித்த, முதல்வரின் உத்தரவை மதிக்காத வகையில்  சமத்துவ நிலை ஏற்க முடியாது என்று பாப்பிரெட்டிப்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த அண்ணல் அம்பேத்கர்  புகைப்படம் அகற்றப்பட்டதாக அறிந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், திருவுருவப் படத்தை மீண்டும் வைக்க வேண்டும் என கடந்த 14 ஆம் தேதியில் இருந்து தற்போது வரை பல்வேறு முறை கோரிக்கை விடுத்துள்ளனர். 

 



ஆனால் அகற்றப்பட்ட அம்பேத்கர் திருவுருவப் படம் அலுவலகத்தில் வைக்கவில்லை. இதனால் அகற்றிய டாக்டர் அம்பேத்கர் படத்தை மீண்டும் வைக்க வேண்டும் என்றும், தமிழக சட்டமன்றத்தில் முதல்வர் அறிவித்ததை மதிக்காமல், படத்தை அகற்றிய அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, பாப்பிரெட்டிபட்டி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், பாப்பிரெட்டிப்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து வட்டார வளர்ச்சி அலுவலர் அமரவேல் மற்றும் காவல் துறையினர் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததால், போராட்டம் கைவிடப்பட்டது. தொடர்ந்து பாப்பிரெட்டிப்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் 3 மணி நேரமாக போராட்டத்தில் ஈடுபட்டதால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 



அரூர் அருகே பிரசித்தி பெற்ற தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் கோயிலில் பூஜை செய்ய கூகுள் பே மூலம் 3,500 ரூபாய் பெற்ற அர்ச்சகர் சஸ்பெண்ட்



தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த தீர்த்தமலையில் பிரசித்தி பெற்ற தீர்த்தகிரீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. பிரசித்தி பெற்ற சிவ ஸ்தலம் என்பதால் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான மக்கள் வந்து செல்கின்றனர். இங்கு வரும் மக்கள் தீர்த்தமலை மலைக் கோவிலுக்கு 5 கிலோ மீட்டர் நடந்து சென்று ஐந்து வகையான தீர்த்தங்களில் குளித்து ஈஸ்வரன் மற்றும் வடிவாம்பிகை சாமியை வணங்கி செல்கின்றனர். இங்கு வரும் மக்கள் முடி காணிக்கை செலுத்துவது, சிறப்பு பூஜைகள் செய்வது குழந்தைகளுக்குச் நீக்குவது போன்ற வழிபாடுகளும் செய்கின்றனர். இந்நிலையில் கடந்த வாரம் ஊத்தங்கரை சேர்ந்த பக்தர் ஒருவர் கோயில் அர்ச்சகர் பாலாஜியை தொடர்புகொண்டு குழந்தைகளுக்கு சிகை நீக்கி காதணி விழா செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.

 



 

அப்பொழுது கோயில் அர்ச்சகர் பாலாஜி என்பவர் இலவசமாக செய்கின்ற பூஜைகளுக்கு, அபிஷேக செலவு வாங்கவேண்டும், அர்ச்சகர்கள் ஐந்துபேர் பணிபுரிகின்றார் என கூறி 3,500 ரூபாய் கூகுள் பே மூலம் பெற்றுள்ளார். மேலும் மூட்டை அடிப்பவர்கள், காது குத்துபவர்களைக்கு தனி கட்டணம் என தெரிவித்துள்ளார்.  இதுகுறித்த செல்போன் உரையாடல் சமூக வலைதளங்களில் பரவியது. இதனை அடுத்து தருமபுரி மாவட்ட இந்து அறநிலையத்துறை உதவி ஆணையர் பிரகாஷ் செல்போன் உரையாடலைக் கொண்டு விசாரணை நடத்தினார். இந்த விசாரணையில் இலவசமாக செய்கின்ற சிறப்பு பூஜைகளுக்கு பக்தர்களிடையே 3,500 ரூபாய் பணம் பெற்ற அர்ச்சகர் பாலாஜியை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். மேலும் தீர்த்தமலை திருக்கோவிலில் எந்த இடத்திலும் யாரும் கட்டணம் வசூல் செய்யக் கூடாது என எச்சரித்துள்ளார்.