கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் உள்ள காவேரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீர் வரத்தானது சில நாட்களாக அதிகரித்து வந்தது, இந்த நிலையில் நேற்றைய தினம் இந்த நீர்வரத்தின் அளவு குறைந்த நிலையில் இன்று மீண்டும் நீர்வரத்து அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 72.77 அடியாக உள்ளது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 11 ஆயிரத்து 392 கன அடி நீர் வந்து கொண்டு இருந்த நிலையில் நேற்று 8 ஆயிரத்து 603 கன அடியாக குறைந்தது. இந்நிலையில், இன்று காலை முதல் அணைக்கு வரும் நீரின் அளவு 8 ஆயிரத்து 649 கன அடியாக உயர்ந்ததுள்ளது. தற்போதய நிலையில் அணையின் நீர் இருப்பு 35.12 டி.எம்.சி ஆக குறைந்து உள்ளது.
அணையில் இருந்து வினாடிக்கு 5,917 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதேபோன்று கிருஷ்ணராஜ சாகர் மற்றும் கபினி அணையில் இருந்து வினாடிக்கு 36 ஆயிரம் கன அடி தண்ணீர் தமிழகத்திற்கு திறக்கப்பட்டு வருகிறது. கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் கடந்த ஜூலை 25 ஆம் தேதி காலை மேட்டூர் அணையை வந்தடைந்தது. நேற்றைய தினம் குறைந்திருந்த அணையின் நீர் வரத்து இன்றைய தினம் அதிகரிக்கத் தொடங்கியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.