தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் சிறப்பு தொகுப்பில் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு மற்றும் ரூ.1,000 வழங்கப்பட்டு வருகிறது. சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் கார்மேகம் எடப்பாடி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பூலாம்பட்டி, குப்பனூர் உள்ளிட்ட பகுதிகளில் கரும்பு கொள்முதல் செய்யப்படும் தோட்டத்திற்கு நேரடியாக சென்று கரும்பின் தரம் குறித்தும், கரும்பை சுவைத்து ஆய்வு செய்தார். இதன்படி சேலம் மாவட்டத்தில் 10,73,514 அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் 939 இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கு என மொத்தம் 10,74,453 குடும்பங்களுக்கு முழுக் கரும்பு வழங்கிடும் வகையில் கொள்முதல் செய்யப்பட உள்ளது. இதற்காக வேளாண்மைத்துறை அலுவலர்கள் மற்றும் கூட்டுறவுத் துறை அலுவலர்கள் அடங்கிய வட்டார அளவிலான கொள்முதல் குழு அமைக்கப்பட்டு கரும்பின் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டுத் தரமான கரும்புகள் கொள்முதல் செய்யப்படுகிறது. வருகின்ற 09.01.2023 முதல் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் செய்திட தமிழ்நாடு அரசால் தெரிவிக்கப்பட்டுள்ளது.



சேலம் மாவட்டத்திற்குத் தேவையான கரும்புகள் அனைத்தும் சேலம் மாவட்டத்திலிருந்தே கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. சேலம் மாவட்டத்தில் அதிகமாக கரும்பு பயிரிடப்பட்டுள்ளதால் மற்ற மாவட்டங்களான நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களுக்குத் தேவையான கரும்புகளையும் இங்கிருந்து தொடர்புடைய மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள அலுவலர்கள் குழுவின் மூலம் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்கின்றனர். இந்த ஆய்வின் போது, கண்காணிப்பு அலுவலர், தமிழ்நாடு மாநில நகர கூட்டுறவு வங்கிகளின் இணை கூடுதல் பதிவாளர் மற்றும் பல துறைகளை சேர்ந்த அரசு அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.



பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம், சேலம் மாவட்டத்தில் 10,74,000 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பில் செங்கரும்பு வழங்குவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. கரும்பு கொள்முதல் செய்வதில் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் தனி கவனம் செலுத்த வேண்டும் என அரசு தெரிவித்துள்ளது. இதன் காரணமாக கரும்பு கொள்முதல் செய்ய வேளாண் மற்றும் கூட்டுறவு சங்கங்கள் மூலமாகவும் தனிக்குழு அமைத்தும் விவசாயிகளிடம் கரும்பு நேரடியாக இடைத்தரகர்கள் இன்றி கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இதன் காரணமாக விவசாயிகளுக்கு அரசு நேரடியாக ஆன்லைன் மூலம் அவரவர் வங்கி கணக்கு பணம் செலுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் விவசாயிகள் ஒரு சிலர் கூறிய குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்த மாவட்ட ஆட்சியர் கடந்த ஆட்சி காலத்தில் இடைத்தருகர்கள் மூலம் கரும்பு விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்பட்டதாகவும் தற்பொழுது இடைத்தரகர்கள் இன்றி நேரடியாக விவசாயிகளிடமே கொள்முதல் செய்ய தனி குழு அமைத்து ஆறடி உயரமுள்ள தரமான செங்கரும்பு ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்படும் கரும்புக்கு விலை நிர்ணயம் செய்ய தனி குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்க நடவடிக்கைகள் எடுப்பார் என்றும் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் உறுதியளித்துள்ளார்.