ஈரோட்டில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வங்கி கடனுதவி மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வங்கி கடன் இணைப்பு, மதி எக்ஸ்பிரஸ் மின் வாகனங்கள் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.


இதன் ஒரு பகுதியாக, சேலம் மாநகர் தொங்கும் பூங்கா பல்நோக்கு அரங்கத்தில் சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி தலைமையில் சுய உதவி குழுக்களுக்கு வங்கி கடன் இணைப்பு, மதி எக்ஸ்பிரஸ் மின் வாகனங்கள் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சேலம் மாநகராட்சி ஆணையாளர் பாலச்சந்தர், சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், சேலம் வடக்கு சட்டமன்ற சட்டமன்ற உறுப்பினர் இராஜேந்திரன், சேலம் மேற்கு சட்டமன்ற உறுப்பினர் அருள், மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் சதாசிவம், துணை மேயர் சாரதா தேவி, கூட்டுறவு சங்க இணை பதிவாளர் ரவிக்குமார் ஆகியோர் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினர். 



இதில் சேலம் மாவட்டத்தில் ஊரக பகுதிகளில் 13,799 குழுக்களும், நகர்ப்புற பகுதியில் 7,083 குழுக்கள் என மொத்தம் 2,55,943 மகளிரைக் கொண்ட 20,882 குழுக்கள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. இக்குழுக்களில் உள்ள மகளிரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் வருடம் தோறும் வங்கிக் கடன் இணைப்பு செய்யப்பட்டு வருகிறது. இதில் நடப்பாண்டான 2023-2024 ஆம் ஆண்டி ரூ.1,124 கோடி இலக்கீடு நிர்ணயம் செய்யப்பட்டு தற்போது வரை ரூ.1109 கோடி கடனுதவி பெறப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக இன்று ரூ.93.55 கோடி வங்கி கடனுதவியும். சுழல் நிதி, சமுதாய முதலீட்டு நிதி மற்றும் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் மூலம் ரூ.3.29 கோடியும் ஆக மொத்தம் ரூ.96.84 கோடி நிதி உதவி வழங்கப்படுகிறது. இதன் மூலம் 1518 குழுக்களைச் சார்ந்த சுமார் 18,216 மகளிருக்கு சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி மகளிர் சுய உதவி குழு கடன்களை வழங்கினார்.